ஜெயலலிதாவுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வாழ்த்து
சென்னை: சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் கடந்த 16-ந் தேதி நடைபெற்றது. தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் பணப்பட்டுவாடா பிரச்சினை காரணமாக தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டதால், மீதம் உள்ள 232 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி 134 தொகுதிகளை கைப்பற்றிய அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கிறது.

6-வது முறையாக முதல்வராகிறார் ஜெயலலிதா. இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அருதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கவிருக்கும் அதிமுகவுக்கும் அதன் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கும் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
திமுக-காங்கிரஸ் கூட்டணி, ஆட்சி அமைக்கக்கூடிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும், சுமார் 100 தொகுதிகளில் அவர்கள் வெற்றி பெற்றது நிறைவைத் தருகிறது.
என்னுடைய சிவகங்கை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளில் திமுக 3 தொகுதிகளிலும், காங்கிரஸ் ஒரு தொகுதிகளி்லும் வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இதற்கு காரணம் திமுகவின் பெரும் பணியும், காங்கிரஸ் கட்சியினரின் பணியும் ஆகும் என பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications