எழுத்து இயக்கம் ஏன்? - ப சிதம்பரம் விளக்கம்
சென்னை: ப சிதம்பரம் தொடங்கியுள்ள எழுத்து தமிழ் இலக்கிய அமைப்பின் அறிமுக விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், இளம் எழுத்தாளர்களின் படைப்புகளை புத்தகமாக வெளியிட்டு உதவுவதற்கான ‘எழுத்து' தமிழ் இலக்கிய அமைப்பை புதிதாகத் தொடங்கி உள்ளார்.
அந்த அமைப்பிற்கான அறிமுக விழா, சென்னை ஆழ்வார்பேட்டை சிவகாமி பெத்தாச்சி கலையரங்கில் நேற்று மாலை நடைபெற்றது.
இந்த விழாவில், ‘எழுத்து' இலக்கிய அமைப்பின் அறங்காவலர்களான தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராஜன், கவிஞர்கள் வைரமுத்து, மு.மேத்தா, முத்தையா ஆகியோரை ப.சிதம்பரம் அறிமுகம் செய்து வைத்தார்.
முத்தையா ‘எழு' என்ற தலைப்பிலும், மு.மேத்தா ‘எழுது' என்ற தலைப்பிலும், வைரமுத்து ‘எழுத்து' என்ற தலைப்பிலும் பேசினார்கள்.
விழாவில் சிதம்பரம் பேசுகையில், "எழுத்து' தமிழ் இலக்கிய அமைப்பு சார்பில், இளம் தமிழ் எழுத்தாளர்கள் படைக்கும், படைப்புகளை புத்தகங்களாக வெளியிட இருக்கிறோம். இளம் எழுத்தாளர்கள் அனுப்பும், படைப்புகளை நடுவர் குழு ஒன்று ஆய்வு செய்து, அதன் பிறகு, அறங்காவலர்கள் ஒப்புதல் அளித்து புத்தகமாக வெளியிடப்பட உள்ளது.
ஆண்டுக்கு குறைந்தபட்சம் 12 புத்தகங்கள் வெளியிடுவது என திட்டமிடப்பட்டுள்ளது. புத்தகம் வெளியிடப்படும் நாளிலேயே, படைப்பாளர்களுக்கு புத்தகத்திற்கான காப்புரிமை முழுவதும் வழங்கப்பட்டு விடும்.
புத்தகத்தின் அச்சிடும் பணி, விற்பனை அனைத்தையும் ‘எழுத்து' இயக்கம் பார்த்துkd கொள்ளும். ஏழரைக் கோடி தமிழர்கள் வாழும் தமிழகத்தில், முதல் புத்தக வெளியீட்டின் போது, ஆயிரம் புத்தகங்கள் கூட விற்பனை செய்ய முடிவதில்லை என்பது வேதனை அளிக்கிறது. தமிழகத்தில் உள்ள அரசு நூலகங்களில் புத்தகங்கள் வாங்கும் முறையை பகிரங்கமாக வெளியில் சொல்ல முடியாத நிலையில்தான் நிலைமை உள்ளது.
மேலும் தமிழகத்தில், பொறியியல் மற்றும் துறைகள் கல்வி நிறுவனங்கள், கலை மற்றும் அறிவியல் கல்வி நிறுவனங்கள், உயர் கல்வி மேம்பாட்டிற்கான பள்ளிகள் என சுமார் 13 ஆயிரம் கல்வி நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்கள் தலா 1 புத்தகங்களை வாங்கினால் கூட 13 ஆயிரம் புத்தகங்களை விற்பனை செய்ய முடியும்," என்றார்.