ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் - விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம் - பி.எச். பாண்டியன்
ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளதாக முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன் கூறியுள்ளார். மும்பை பணக்கார பெண் மரண வழக்கை முன்வைத்து பிஎச் பாண்டியன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: சசிகலாவின் தலைமையை ஏற்றுக்கொள்ளாதவர்கள் பலரும் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது முதல் மரணம் வரை நடந்த நிகழ்வுகளைப் பற்றி செய்தியாளர்களை சந்தித்து வருகின்றனர். முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன் இன்று செய்தியாளர்களை சந்தித்து ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குற்றம் சாட்டினார்.
மும்பை பணக்கார பெண் ஒருவருக்கு மருத்துவர் மூலம் விஷம் கொடுத்து கொலை செய்தனர். மும்பையில் இருந்து டெல்லிக்கு ரயிலில் வருவதற்குள் அந்த பெண்ணின் உடலில் இருந்த விஷம் ஆவியாகி விடக்கூடியது. இந்த கொலைக்கு சாட்சியில்லை. ஆனாலும் அந்த கொலையை செய்தவர்களுக்கு தண்டனை கிடைத்தது. அதுபோல ஜெயலலிதாவிற்கு நிகழ்ந்திருக்கலாம் என்றும் பி. எச். பாண்டியன் கூறியுள்ளார்.
அதே போல செப்டம்பர் 22ஆம் தேதியன்று சுயநினைவற்ற நிலையில் ஜெயலலிதா மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அன்றைய தினம் நடந்தது என்ன?
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது போயஸ் கார்டனில் இருந்தது யார். போயஸ் கார்டனில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக முழு விசாரணை தேவை என்றும் பி எச் பாண்டியன் கூறினார்.
ஜெயலலிதாவிற்கு இதேபோல மரணம் நிகழ்ந்திருக்கலாம் என்றும் பிஎச் பாண்டியன் புகார் கூறியுள்ளார். ஜெயலலிதாவிற்கு சசிகலா விஷம் வைத்து இருக்கலாம் என்றும் அவரது மரணத்தில் மர்மம் இருக்கிறது என்றும் பல ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில் முதல்முறையாக முன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் சந்தேகம் கிளப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.