காந்தி நகர் சாலைக்கு பா ராமச்சந்திர ஆதித்தன் பெயர்!- முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
சென்னை: மறைந்த பத்திரிகை அதிபர், ஆசிரியர் பா.இராமச்சந்திர ஆதித்தன் வசித்து வந்த அடையாறு காந்தி நகர், 4-வது பிரதான சாலைக்கு, 'பா.இராமச்சந்திர ஆதித்தனார் சாலை' என பெயர் மாற்றம் செய்யப்படுவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
ஜனநாயகத்தின் நான்காவது தூணாகப் போற்றப்படும் பத்திரிகைத் துறையில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்புற பணியாற்றியவர் பா.இராமச்சந்திர ஆதித்தன் ஆவார். பாமர மக்களும் செய்திகளை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில் செய்திகளை வெளியிட்டதன் மூலம் பத்திரிகை உலகில் தனக்கென தனி இடத்தை அவர் பெற்றிருந்தார்.

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியை மீட்டெடுப்பதற்கும் இவர் முக்கிய பங்காற்றியுள்ளார்.
பத்திரிகை உலகில் தனி இடத்தை பெற்றிருந்த பா.இராமச்சந்திர ஆதித்தன் நினைவைப் போற்றும் வகையில் சிறப்பு செய்ய வேண்டும் என்பது என் விருப்பம் ஆகும்.
மாலை முரசு நாளிதழின் இயக்குநர் இரா.கண்ணன் ஆதித்தன் தனது தந்தை பா.இராமச்சந்திர ஆதித்தன் வசித்து வந்த அடையாறு காந்தி நகர், 4-ஆவது பிரதான சாலைக்கு, அன்னாரது பெயரை சூட்டிட வேண்டும் என என்னிடம் வேண்டுகோள் விடுத்தார்.
அதனை ஏற்று அடையாறு காந்தி நகர், 4-ஆவது பிரதான சாலையை "பா.இராமச்சந்திர ஆதித்தனார் சாலை" என பெயர் மாற்றம் செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு நான் சென்னை மாநகர மேயர் அவர்களுக்கு உத்தரவிட்டேன். அதன் அடிப்படையில் 3.8.2015 அன்று நடைபெற்ற சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பா.இராமச்சந்திர ஆதித்தன் நினைவைப் போற்றும் விதமாக, அடையாறு காந்தி நகர், 4-ஆவது பிரதான சாலையை "பா.இராமச்சந்திர ஆதித்தனார் சாலை" என பெயர் மாற்றம் செய்வதற்கான அரசு உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்படும். புதிதாக பெயர் சூட்டப்பட்ட சாலை பெயர் பலகையை நான் விரைவில் திறந்து வைப்பேன்."
-இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications