ரூ75 கோடி டெபாசிட் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் மோசடி வழக்கில் பச்சமுத்துவுக்கு ஜாமீன்!
சென்னை: 111 பேரிடம் ரூ.74.39 கோடி வாங்கி மோசடி செய்த வழக்கில் எஸ்.ஆர்.எம்.குழுமத் தலைவர் பச்சமுத்துவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தினமும் காலை விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும் நீதிபதி கூறியுள்ளார்.
மருத்துவ சீட் தருவதாக கூறி 111 மாணவர்களிடம் ரூ.74.39 கோடி மோசடி செய்த புகாரில் பச்சமுத்து கைது செய்யப்பட்டு புழல் சிறையில் உள்ளார். ரூ.75 கோடி நீதிமன்றத்தில் டெபாசிட் செய்வதாக ஜாமீன் வழக்கு விசாரணையின் போது பச்சமுத்து தரப்பில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் உத்திரவாதம் அளிக்கப்பட்டது.

அந்த மனுவை சென்னை சைதாப்பேட்டை 11-வது நீதி மன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, ஜாமீன் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதி மன்றத்தில் பச்சமுத்து சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
ரூ.75 கோடியை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வைப்பு தொகையாக செலுத்த வேண்டும் எனவும் 15 நாட்களுக்கு தினமும் காலை 10.30 மணிக்கு விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும் நீதிபதி கூறியுள்ளார். மறுஉத்தரவு வரும் வரை விசாரணை அதிகாரியிடம் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் பாஸ்போர்ட்டை விசாரணை அதிகாரியிடம் ஒப்படைக்கவும் நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். தேவைப்பட்டால் பாஸ்போர்ட்டை பெற்றுக்கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. அதேபோல் சினிமா பைனான்சியர் போத்ரா தொடர்ந்த மற்றொரு வழக்கிலும் பச்சமுத்துவுக்கு முன்ஜாமீன் வழங்கியுள்ளது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்.












Click it and Unblock the Notifications