எஸ்.ஆர்.எம்.பச்சமுத்துவின் ஜாமீன் மனு நிபந்தனையை தளர்த்த கோரிய மனு தள்ளுபடி
சென்னை: சினிமா பைனான்சியர் போத்ராவுக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் எஸ்.ஆர்.எம். பச்சமுத்துவின் முன்ஜாமீன் நிபந்தனையை தளர்த்த கோரிய மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சினிமா பைனான்சியர் முகுந்சந்த் போத்ரா என்பவரிடம் மதன் மற்றும் பச்சமுத்து உள்ளிட்டோர் 7 கோடி ரூபாய் வரை பணம் பெற்றதாக கூறப்படுகிறது. மதன் காணாமல் போன பின்பு இந்த பணத்தை திரும்ப கொடுக்கும் படி பச்சமுத்து தரப்பிடம், போத்ரா கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் அளிக்கப்பட்டது.

இந்த வழக்கில் கடந்த மாதம் 9ம் தேதி பச்சமுத்துக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கப்பட்டது. அதன்படி தினமும் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் மாலை 5.30 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. இதனை தளர்த்தக்கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் பச்சமுத்து மனு தாக்கல் செய்தார். அப்போது அரசு தரப்பில் இந்த வழக்கு தொடர்பாக 12 நாட்கள் மட்டுமே பச்சமுத்து நேரில் ஆஜராகி கையெழுத்திட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, பச்சமுத்து முன் ஜாமீன் நிபந்தனையை தளர்த்த கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். ஏற்கனவே பணமோசடி வழக்கிலும் பச்சமுத்துவின் முன்ஜாமீன் நிபந்தனையை தளர்த்த கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications