திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட 'தேர்தல் மன்னன்' பத்மராஜன் மனு !
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் முதல் ஆளாக தேர்தல் மன்னன் பத்மராஜன் மனு தாக்கல் செய்துள்ளார்.
மதுரை: தேர்தல் மன்னன் பத்மராஜன் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட சுயேட்சையாக மனுதாக்கல் செய்துள்ளார்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே குஞ்சாண்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் தேர்தல் மன்னன் பத்மராஜன். கடந்த 27 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், லோக்சபா, சட்டமன்ற தேர்தல் மற்றும் இடைத் தேர்தல்களில் போட்டியிட்டு வருகிறார். தொடக்கத்தில் பஞ்சர் கடை நடத்திய இவர், பின்னர் சிறிய டயர் தொழிற்சாலைக்கு உரிமையாளரானார். சாதனை முயற்சிக்காக தொடர்ந்து தேர்தல்களில் போட்டியிட்டு வருகிறார் பத்மராஜன். ஆனால் இதுவரை தேர்தலில் வெற்றி பெற்ற வரலாறு கிடையாது.
கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறுவதற்காக தொடர்ந்து வேட்புமனு தாக்கல் செய்து வரும் பத்மராஜன், லிம்கா சாதனை புத்தகத்தில் 3 முறையும், கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுவதற்கான பதிவையும் ஏற்படுத்தியுள்ளார். வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிடுவதை லட்சியமாக கொண்டுள்ளார்.
தற்போது திருப்பரங்குன்றம் தேர்தலில் போட்டியிடுவதற்காக தேர்தல் மன்னன் பத்மராஜன் மதுரை திருநகரிலுள்ள தாலுகா அலுவலகத்தில் புதன்கிழமை முதல் மனுவைத் தாக்கல் செய்தார். இவரது மனுவைத் தொகுதியின் தேர்தல் அலுவலரான ஜீவா பெற்றுக் கொண்டார்.
வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பத்மராஜன், தேர்தலில் வெற்றியோ தோல்வியோ அதைப் பற்றி நான் சிறிதும் கவலைப்படவில்லை. ஆனால் ஜனநாயக நடைமுறையில் யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம் என்பதற்கு நானே எடுத்துக்காட்டாகத் திகழ்கிறேன். திருப்பரங்குன்றம் தொகுதியில் தற்போது தாக்கல் செய்துள்ள மனுவோடு சேர்த்து இதுவரை 177 முறை தேர்தலில் போட்டியிட்டுள்ளேன். நான்கு முறை ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிட்டேன் என பெருமையுடன் தெரிவித்தார்.