பாலமேட்டில் தடையை மீறி காளைகள் அவிழ்த்து விடப்பட்டன - போலீஸ் தடியடியால் பதற்றம்
மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு மைதானத்தில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. ஓடி வந்த காளைகளை அடக்க முயன்றவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்
சென்னை: மாட்டுப் பொங்கலான இன்று,மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம்.ஆனால் உச்சநீதிமன்றம் விதித்துள்ள தடை காரணமாக,பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை.
இன்று காலை முதல் பாலமேடு கிராம மக்கள்,தங்கள் வீட்டில் கருப்புக் கொடிகளை ஏற்றியும்,கருப்புச் சட்டை அணிந்தும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். கடையடைப்பு போராட்டமும் நடைபெற்றது.

பாலமேட்டில் இன்று காலை தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த உள்ளதாக தகவல்கள் பரவி வந்தது. இதனைத் தொடர்ந்து பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடக்கும் வாடிவாசல் பகுதியில் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். வாடி வாசல் முழுவதுமாக சீல் வைக்கப்பட்டது.
அந்த பகுதியில் மக்கள் அதிகம் கூடி விடக்கூடாது என்பதற்காக வாடிவாசலின் அனைத்து வாயில்களையும் தடுப்புகள் மூலம் காவல்துறையினர் அடைத்தனர்.
காளைகளுக்கு வழிபாடு
இந்நிலையில் இன்று காலை பத்து மணி அளவில் பாலமேட்டில் உள்ள கோவிலில் ஆறு காளைகளுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அந்த வழிபாட்டில் கலந்து கொள்வதற்காக பாலமேட்டைச் செர்ந்த காளைகளுடன்,அதன் உரிமையாளர்களும் வந்திருந்தனர். வாடிவாசல் பகுதியில் பொங்கல் வைத்து காளைகள், பொதுமக்களுக்கு கொடுக்கப்பட்டன.
அவிழ்த்து விடப்பட்ட காளைகள்
இதனையடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட பேரணியும் நடைபெற்றது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் கூட்டத்தில் இருந்த சிலர் தங்களுடைய காளைகளை அவிழ்த்து விட்டனர். காளைகள் தறிகெட்டு ஓடின. இதனையடுத்து அங்கிருந்த இளைஞர்கள் உற்சாக குரல் எழுப்பினர்.
உற்சாக குரல்
இதனையடுத்து அந்த காளைகளை அடக்க இளைஞர்கள் முயன்றனர். நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றதால்,காவல்துறையினர் லேசான தடியடி நடத்தினர். தொடர்ந்து அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது. தடையை மீறி நாங்கள் ஜல்லிக்கட்டு நடத்தி விட்டோம் என்று இளைஞர்கள் உற்சாக குரல் எழுப்பினர்.
நடந்தது ஜல்லிக்கட்டு இல்லை
அதே நேரத்தில் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடக்கவில்லை என்று மாவட்ட எஸ்.பி. விஜயேந்திர பிதாரி கூறியுள்ளார். பொங்கலின் போது கோவில் காளைகளை பூஜைக்காக கொண்டு வருவார்கள். 6 மாடுகளை கொண்டு வந்தனர். பூஜை செய்தனர், கயிறுகளை அவிழ்த்து விட்டனர்.
மாடுகளை பிடித்து விட்டோம்
இது ஊர்வலம்தான் ஜல்லிக்கட்டு அல்ல வழக்கம் போல நடைபெறும் சம்பவம்தான். மாடுகளை கட்டியிருந்த கயிறுகளை அவிழ்த்து விட்டார்கள். மாடுகள் ஓடிவிட்டன. நாங்கள் தடுத்து நிறுத்தி விட்டோம் என்றும் எஸ்.பி. விஜயேந்திர பிதாரி கூறியுள்ளார். தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தி விட்டோம் என்று இளைஞர்கள் கூறினாலும், நடந்தது ஜல்லிக்கட்டு இல்லை என்று மாவட்ட எஸ்.பி. கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications