புட்ரா, புட்ரா: சாலையில் கவிழ்ந்த லாரியில் இருந்து பாமாயிலை ஓடியோடி பிடித்த மக்கள்
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் 3-ரோடு என்ற இடத்தில் பாமாயில் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
சென்னையில் இருந்து பாமாயில் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று திருச்சிக்கு கிளம்பியது. லாரியை திருச்சியைச் சேர்ந்தவர் ஓட்டினார். லாரி பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலத்தில் உள்ள 3 ரோடு மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்தது.
அப்போது டயர் திடீர் என்று பஞ்சர் ஆனது. இதனால் நிலைதடுமாறிய லாரி சாலையோர தடுப்புக்கட்டை மீது ஏறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் லாரி டிரைவர், கிளீனர் காயமின்றி தப்பினர்.
அப்போது லாரியில் இருந்த பாமாயில் சாலையில் கொட்டியது. இதை பார்த்த மக்கள் பாமாயிலை பிடித்துச் செல்ல குடங்களை எடுத்துக் கொண்டு ஓடி வந்தனர். மக்கள் பாமாயிலை போட்டி போட்டுக் கொண்டு பிடித்துச் சென்றனர். பலர் குடம் குடமாக பிடித்துச் சென்றனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து லாரியை மீட்க நடவடிக்கை எடுத்தனர்.