ஆட்சியை கைப்பற்றுவது எப்படி.. மூத்த வழக்கறிஞருடன் ஓபிஎஸ் ஆதரவு பாண்டியராஜன் அவசர ஆலோசனை
எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்ததையடுத்து, சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஜோதியுடன் மாஃபா பாண்டியராஜன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.
சென்னை: ஓபிஎஸ் ஆதரவு அமைச்சரான மாஃபா பாண்டியராஜன், செம்மலை ஆகியோர் மூத்த வழக்கறிஞர் ஜோதியுடன் ஆலோசனை நடத்தினார்கள்.
ஓபிஎஸ் ராஜினாமா செய்த நிலையில், அடுத்ததாக சசிகலா ஆட்சி அமைக்க கோரிக்கை வைத்தார். ஆனால், ஆளுநர் அழைப்பு விடுக்காமல் காலம் தாழ்த்தினார். இதனிடையே சசிகலா சிறையும் சென்றுவிட்டார்.
இந்நிலையில், இன்று எடப்பாடி பழனிச்சாமியை ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆட்சி அமைக்க அழைத்துள்ளார். இதனால் ஓபிஎஸ் தரப்பிற்கு சற்று பதற்றம் ஏற்பட்டுள்ளது.

அதிர்ச்சி
தொடக்கத்தில் சசிகலாவை ஆதரித்த மாஃபா பாண்டியராஜன் பின்னர் ஓபிஎஸ் அணிக்கு தாவினார். இன்று ஆளுநர் வித்யாசாகர் ராவ் எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்துள்ள நிலையில் பாண்டியராஜன் மூத்த வழக்கறிஞருடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.

ஆளுநர் முடிவு
10 நாட்களாக இழுபறியில் இருந்த ஒரு பிரச்சனைக்கு இன்று முடிவு கிடைத்திருக்கிறது. சசிகலாவை ஆட்சி அமைக்க அழைக்காத ஆளுநர் வித்யாசாகர் ராவ், எடப்பாடி பழனிச்சாமியையும் அழைக்காமல் தாமதம் செய்தார். சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா நேற்று சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், 10 நாட்களாக நீடித்து வந்த குழப்பத்திற்கு ஆளுநர் ஒரு முடிவு கட்டியுள்ளார்.

அவசர ஆலோசனை
ஆளுநர் வித்யாசாகர் ராவ், எடப்பாடி பழனிச்சாமியை அழைத்த உடன், ஓபிஎஸ் ஆதரவு மாஃபா பாண்டியராஜன் இன்று சென்னை உயர்நீதிமன்றத்திற்கு விரைந்தார். அங்கு மூத்த வழக்கறிஞர் ஜோதியுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். அவருடன் ஓபிஎஸ் அணிக்கு மாறிய செம்மலையும் சென்று ஆலோசனையில் பங்கேற்றார்.

ஓபிஎஸ்ஸுக்கு மாற்று வழி என்ன?
ஆளுநர் எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க அழைத்தால் ஓபிஎஸ் தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனால், ஓபிஎஸ் ஆட்சி தொடர என்னென்ன வழிவகைகள் இருக்கிறது என்பது குறித்தும் மாற்று வழிகள் என்ன என்பது குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்திவிட்டு மாஃபா பாண்டியராஜன் சென்றார்.












Click it and Unblock the Notifications