பங்குனி உத்திரம்: முருகன் ஆலயங்களில் கோலாகலம்; பழனியில் தேரோட்டம்!
பழனி/சென்னை: பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு முருகன் ஆலயங்களிலும், குல தெய்வ கோவில்களிலும் ஏராளமானோர் வழிபாடு நடத்தினர். பழனியில் நடைபெற்ற பங்குனித் தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று திருத்தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.
பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரமும், பவுர்ணமியும் சேரும் நாள் நட்சத்திரத்தால் பவுர்ணமியின் பலன் கூடுதலாக அமையும் நாளாக அமைகின்றது.
ஒவ்வொரு மாதத்திலும் பவுர்ணமி பல்வேறு சிறப்புகளை அளிக்கிறது. அதில் பங்குனி பவுர்ணமி குடும்ப ஒற்றுமையை உணர்த்தும் நாளாக அமைவதுடன், தமிழ் கடவுள் முருகனுக்கு விழா எடுக்கும் ‘பங்குனி உத்திரம்' தனிச்சிறப்பு வாய்ந்ததாக அமைகிறது.
முருகப் பெருமானின் அவதார நோக்கமான சூரனை சம்ஹாரம் செய்ததற்கான பரிசாக இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்கு மணம் முடித்துத்தந்த நாள் பங்குனி உத்திரம் அன்றுதான் என்பதால் இத்திருமணம் நடந்த திருப்பரங்குன்றம் முருகப்பெருமானின் அறுபடை வீட்டில் தனித்தன்மை பெற்றதாக அமைகின்றது.

பழனியில் தீர்த்தக்காவடி
பழனியில் பங்குனி உத்திரத் திருவிழா கடந்த மார்ச் மாதம் 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக பால், இளநீர், கரும்பு காவடி எடுத்தும், கொடுமுடி தீர்த்தம் எடுத்தும், சேவல்கள் கொண்டு வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

திருக்கல்யாணம்
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்றிரவு 7 மணிக்கு மேல் துலாம் லக்கனத்தில் நடந்தது. வள்ளி - தெய்வானை சமேதரராய் முத்துக்குமார சுவாமிக்கு 16 வகை அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து சுவாமி மலர்களாலும், அணிகலன்களாலும் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதன்பின், பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க மாங்கல்யம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

வெள்ளித் தேரோட்டம்
தொடர்ந்து மாலை மாற்றுதல், அப்பளம் உடைத்தல் போன்ற திருமண சடங்கு நிகழ்ச்சி நடந்தது. இதன்பின், மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி ரதத்தில் வள்ளி - தெய்வானை சமேதரராய் முத்துக்குமார சுவாமி சன்னதி வீதி மற்றும் கிரிவீதிகளில் உலா வந்தார்.

பங்குனித் தேரோட்டம்
முக்கிய நிகழ்ச்சியான பங்குனி உத்திரத் திருத்தேரோட்டம் இன்று மாலை வடக்கு கிரிவீதியில் நடைபெற்றது. இதனைக் காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான குவிந்தனர். திருத்தேரில் சர்வ அலங்காரத்தில் காட்சியளித்த தம்பதி சமேதர் முத்துக்குமாரசுவாமிக்கு மகாதீபாராதனை நடத்தப்பட்டது.

வடம் பிடித்த பக்தர்கள்
பின்னர், அங்கு குவிந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் "அரோகரா' கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரை கோயில் யானை பின்னேயிருந்து தள்ளியது.

வடபழனியில் பங்குனி உத்திரம்
வடபழனி முருகன் கோவிலில் இன்று அதிகாலையிலேயே பக்தர்கள் குவிய தொடங்கினர். அலகு குத்தியும், காவடி எடுத்தும் ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.

முருகனுக்கு பால்குடம்
சாலி கிராமம் நாகத்தம்மன் கோவிலில் இருந்து 1500 பெண்கள் பால் குடம் சுமந்து ஊர்வலமாக வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்தனர். மேலும் 100க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் அலகு குத்தியும், காவடி சுமந்தும் வந்து நேர்த்தி கடன் செய்தனர். வடபழனி முழுவதும் பக்தி கோஷம் முழங்க பரவசமாக காணப்பட்டது.












Click it and Unblock the Notifications