இந்தியாவைக் காக்கும் பணியில் இதோ ஒரு “ராணுவ கிராமம்” - தமிழகத்தின் பஞ்சம்பட்டி!
திண்டுக்கல்: இந்தியாவின் 69வது சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஒரு கிராமமே நாட்டு மக்களின் உயிர் காக்க வீட்டிற்கொரு ராணுவ வீரரை நாட்டிற்கு அளிக்கும் மகத்தான பணியினை செய்து வருகின்றது.
திண்டுக்கல்லில் இருந்து 7 கி.மீ தூரத்தில் பஞ்சம்பட்டி கிராமம் அமைந்து உள்ளது. இக்கிராம மக்கள் தொகை 2001ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 6530 ஆகும். இக்கிராமத்தில் வீட்டிற்கு குறைந்தது ஒருவர் ராணுவத்தில் உள்ளனர்.
சேவையே லட்சியம்
2ஆம் உலக போரில் இக்கிராமத்தை சேர்ந்த 67 பேர் பங்கேற்றுள்ளனர். நாட்டிற்கு சேவை செய்வது தங்களது லட்சியங்களில் ஒன்று என்கிறாரார்கள் இந்த ஊர்க்காரர்கள்.
நாட்டுபற்று விதை
இந்த ஊரைச் சேர்ந்த சேவியர் என்பவர் 2 ஆம் உலக போரின் போது ராணுவத்தில் சேர்ந்தார். அதிகாரி அந்தஸ்தில் பணியாற்றினார். இவர் விடுமுறைக்கு வந்தபோது கிராம மக்களிடம் நாட்டுபற்று பற்றி கூறியிருக்கிறார்.
இளைஞர்களுக்கும் ஆசை:
சிலரை ராணுவத்தில் சேர்க்க அழைத்தும் சென்றார். சுமார் நூறு பேர் இவரால் ராணுவத்தில் சேர்க்கப்பட்டனர். அதன்பின் ராணுவவீரர்கள் விடுமுறைக்கு வரும் போது அவர்களை பார்த்து பிற இளைஞர்களும் ராணுவத்தில் சேர்ந்தனர்.
கிராமம் முழுதும் ராணுவ வீரர்கள்:
தற்போது இக்கிராமத்தில் 300 பேர் முன்னாள் ராணுவ வீரராகவும், 300க்கும் அதிகமானோர் ராணுவத்திலும் உள்ளனர்.
முன்னாள் ராணுவ வீரர் சங்கம்
முன்னாள் ராணுவ வீரர் சங்கமே இந்தக் கிராமத்தில் உள்ளது. இளைஞர்கள் கூட விடுமுறையில் வந்து திருமணத்தை முடித்துவிட்டு 15 நாட்களில் மீண்டும் எல்லைக் காக்க சென்று விடுகின்றனராம். நாமனைவரும் பாதுகாப்பாய் இருக்க தங்களையே அர்ப்பணித்துள்ள இந்த கிராம மக்களுக்கு ஒரு ராயல் சல்யூட்!