கும்பகோணத்தில் பண்ணாய்வாளர் குடந்தை ப. சுந்தரேசனார் நூற்றாண்டு விழா
கும்பகோணம்: குடந்தை (கும்பகோணம்) காந்திப் பூங்கா எதிரில் அமைந்துள்ள சுழற்கழகப் பண்பாட்டு நடுவத்தில் (ரோட்டரி அரங்கம்) 20.06.2015 காலை 10 மணி முதல் மாலை 4.30 மணிவரை பண்ணாய்வாளர் குடந்தை ப. சுந்தரேசனார் நூற்றாண்டு விழாவும் குடந்தை கதிர். தமிழ்வாணன் நினைவு விருது வழங்கும் விழாவும் நடைபெற உள்ளன.
இறைநெறி இமயவன் தலைமையில் நடைபெறும் நிகழ்வின் தொடக்கத்தில் கூகூர் இரா. கத்தூரிரங்கன், க. பூவராகவன், குடந்தை ச.சரவணன் குழுவினரின் தமிழிசை நிகழ்ச்சி நடைபெறும்.
பேராசிரியர் இரா. சிவக்குமரன் அவர்கள் வரவேற்புரையாற்ற, பண்ணாய்வாளர் குடந்தை ப.சுந்தரேசனாரின் நினைவுப்பதிவு என்னும் தலைப்பில் மு.இளங்கோவன் கருத்துரையாற்ற உள்ளார். அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முனைவர் இராச.கலைவாணி அவர்கள் தொன்மைத் தமிழிசை எனும் தலைப்பில் சிறப்புரையாற்ற உள்ளார். இந்த நிகழ்ச்சியில் குடந்தை ப.சுந்தரேசனார் ஆவணப்படம் திரையிடப்பட உள்ளது.
இரண்டாம் அமர்வு பிற்பகல் 2.30 மணிக்குத் தொடங்கி 4.30 மணிக்கு நிறைவுறும்.
புலவர் கதிர் முத்தையன் அவர்கள் தலைமையில் விருது வழங்கல் நிகழ்வு நடைபெற உள்ளது. சி.பா. தமிழ்ச்சோலை அவர்கள் முன்னிலையில் நடைபெறும் நிகழ்வில் மு.இளங்கோவன், தி. சீ. வேங்கடசுப்பன், கி. வேங்கடரமணி, சு. இளஞ்சேட்சென்னி, பாவலர் பூவையார், புலவர் சு.காமராசு, வை. மு. கும்பலிங்கன், நெல்லை வே.கணபதி புலவர் கூத்தங்குடி அரங்கராசன், மு. பராங்குசன் உள்ளிட்டவர்களின் தமிழ்ப்பணியைப் பாராட்டித் தனித்தமிழறிஞர் குடந்தை கதிர். தமிழ்வாணன் அவர்களின் பெயரில் விருது வழங்கப்பட உள்ளது. நிறைவில் இரா. திருமாலன்பன் நன்றியுரை வழங்குவார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைக் குடந்தை உலகத் தமிழ்க்கழகத்தினர் செய்துள்ளனர்.
தொடர்புக்கு:
பேராசிரியர் இரா. சிவக்குமரன் 9443332332
புலவர் கதிர். முத்தையன் 9944478763