எல்லா சாலைகளும் ஓபிஎஸ் வீட்டை நோக்கி.... மிஸ்டுகால் ஆதரவாளர்களுக்கு வாய்ஸ் கால் மூலம் நன்றி
முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு மிஸ்டு கால் மூலம் 35 லட்சம் பேரும், 5 நாட்களில் நேரில் சந்தித்து 3 லட்சம் பேரும் ஆதரவு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசியல் தலைவர்களின் வருகையோடு தொண்டர்கள் கூ
சென்னை: சசிகலா எதிர்ப்பு நிலை எடுத்த பின்னர் ஓபிஎஸ்க்கு தனி ஆதரவு வட்டம் அதிகரித்து வருகிறது. ராமராஜன் சொன்னது போல சமூக வலைத்தளங்களில் இப்போது ஹீரோவாக சித்தரிக்கப்படுகிறார். கடந்த 5 நாட்களில் 3 லட்சம் தொண்டர்கள் நேரில் சந்தித்தும் 35 லட்சம் பேர் மிஸ்டு கால் மூலமும் ஆதரவு கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனக்கு ஆதரவு அளித்தவர்களுக்கு வாய்ஸ் கால் மூலம் நன்றி கூறி வருகிறார் ஓ.பன்னீர் செல்வம்.
கடந்த 5ஆம் தேதி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த முதல்வர் பன்னீர் செல்வம் 7ஆம் தேதியன்று இரவு மெரீனா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிடத்தில் தியானப்புரட்சி நடத்தினார். அப்போது முதலே அதிமுகவில் ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என இரண்டு அணிகளாக பிரிந்துள்ளனர்.
ஓபிஎஸ்க்கு ஆதரவு
புதன்கிழமை காலை முதலே ஓபிஎஸ் வசிக்கும் தென்பெண்ணை பங்களாவை தேடி வருவோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சாரை சாரையாக வாகனங்களில் வந்து தங்களின் ஆதரவை ஓபிஎஸ்க்கு நேரில் வந்து ஆதரவு தெரிவித்து செல்கின்றனர்.
தொண்டர்கள் ஆதரவு
இளம் தலைமுறையினரிடையே ஓ.பன்னீர்செல்வத்தின் செல்வாக்கை மேலும் உயர்த்தும் நடவடிக்கைகளில் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட தகவல் தொடர்பு அணி செயலாளர் ராமச்சந்திரன் தலைமையிலான குழுவினர் ஈடுபட்டுள்ளனர். ஆதரவு தெரிவிக்க வருவோர்களுடைய பெயர், ஊர் விபரம் கம்ப்யூட்டர் மூலம் பதிவு செய்யப்படுகிறது. புதன்கிழமை முதல் நேற்று வரை 5 நாட்களில் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு நேரில் ஆதரவு அளித்துள்ளதாக கம்ப்யூட்டர் பதிவில் தெரிய வந்துள்ளது.
35 லட்சம் மிஸ்டுகால்கள்
9289222028 என்ற எண்ணில் ‘மிஸ்டு கால்' கொடுத்து ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியான 5 நாட்களில் 35 லட்சத்துக்கும் அதிகமான மிஸ்டு கால்கள் வந்துள்ளதாகவும், இதில் 3 லட்சம் மிஸ்டு கால்கள் வெளிமாநிலங்களில் இருந்தும், 2 லட்சம் மிஸ்டு கால்கள் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களிடம் இருந்தும் வந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஓபிஎஸ் நன்றி
தனக்கு ஆதரவு அளிப்பவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஓ.பன்னீர்செல்வம் வாய்ஸ் கால் மூலம் நன்றி கூறி வருகிறார். வாட்ஸ்அப், பேஸ்புக், டுவிட்டரில்
அந்த குரல் பதிவு உலா வருகிறது. முதல்வர் ஜெயலலிதா வாய்ஸ் கால் மூலம் வாக்கு சேகரித்தது போல அதே பாணியில் தற்போது ஓ.பன்னீர்செல்வம் குரல் பதிவு மூலம் நன்றி தெரிவித்திருக்கிறார்.
மக்கள் பணியாற்றுவேன்
அவர் நான் ஓபிஎஸ் பேசுகிறேன். மிஸ்டு கால் மூலம் ஆதரவு தெரிவித்ததற்கு நன்றி. புரட்சி தலைவி அம்மா வழியில் மக்களுக்கு பணியாற்ற ஆதரவு அளித்துள்ளர்கள். அம்மா வழியில் மக்கள் பணி தொடரும். என்று ஓ.பன்னீர்செல்வத்தின் குரல் பதிவு இடம் பெற்றுள்ளது.
எல்லா சாலைகளும் தென்பெண்ணை நோக்கி
எல்லா சாலைகளும் ஓபிஎஸ் இல்லம் நோக்கி என்பது போல ஆட்டோக்களிலும், வேன்களிலும் சாரை சாரையாக வந்து ஆதரவு கூறி வருகின்றனர். எம்எல்ஏக்களை அடைத்து வைத்து விட்டாலும் அவர்களுக்கு வாக்களித்த தொண்டர்களின் ஆதரவு ஓபிஎஸ்க்கு இருப்பதால் சசிகலா முகாம் கலக்கமடைந்துள்ளது. எனவேதான் அவர் போயஸ்கார்டனில் இருந்து கூவத்தூருக்கு சென்று எம்எல்ஏக்களை சமாதானம் செய்து வருகிறார்.
வெற்றி யாருக்கு?
எம்எல்எக்கள் ஆதரவு உள்ள சசிகலாவா? மக்கள் ஆதரவு உள்ள ஓ.பன்னீர் செல்வமா? யாருக்கு வெற்றி என்பதை அறிய நடுநிலை வாக்காளார்களும் எதிர்கட்சியினரும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.