'சின்னம்மா'வுக்காக வரிந்து கட்டும் சீனியர் நிர்வாகிகள்... பண்ருட்டி ராமச்சந்திரனின் தொடரும் மவுனம்!
சசிகலா விவகாரத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன் தொடர்ந்து அமைதி காத்து வருகிறார். சசிகலா எதிர் அணிக்கு பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமை வகிக்கிறாரோ என்ற சந்தேகத்தை அதிமுக தொண்டர்கள் எழுப்பி வருகின்றனர்.
சென்னை: அதிமுகவின் தலைமை பொறுப்பை சசிகலா ஏற்க வேண்டும் என்று எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதி பொன்னையன் தொடங்கி சீனியர் நிர்வாகிகள் பலருமே "வாய்ஸ்" கொடுத்து வருகின்றனர். ஆனால் ஜெயலலிதாவால் மிகவும் மதிக்கப்பட்ட மூத்த தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரன் மிகவும் அமைதியாக எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்காமல் இருந்து வருவது ஏன் என அதிமுக தொண்டர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுக தலைமையையும் ஆட்சியையும் கைப்பற்ற சசிகலா முயற்சித்து வருகிறார். இதற்காக அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் சென்னைக்கு வரவழைக்கப்படுகின்றனர்.
பேருந்துகளில் படையெடுத்து வரும் அதிமுக நிர்வாகிகள், போயஸ் கார்டனுக்கு அழைத்துச் செல்லப்பட்டு 'சின்னம்மா நீங்கதான் கட்சியை காப்பாத்தனும்' என கோரஷாக வலியுறுத்தி வருகின்றனர். இதில் உச்சகட்டமாக அமைச்சர்கள் சிலர், சசிகலா முதல்வராக வேண்டும் என்றெல்லாம் கூட வலியுறுத்தி வருகின்றனர்.
அதிமுகவில் இவ்வளவு அமளி துமளி நிலவுகிறபோதும் மிக மூத்த தலைவர்களில் ஒருவரான பண்ருட்டி ராமச்சந்திரன் எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்காமல் இருந்து வருகிறார். அவரது அமைதி அதிமுக தொண்டர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஒருவேளை சசிகலாவுக்கு எதிரான அணிக்கு பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமை வகிக்கிறாரோ? என்கிற சந்தேகத்தையும் அதிமுக தொண்டர்கள் எழுப்பியுள்ளனர்.












Click it and Unblock the Notifications