கடலூர் மாவட்டத்திற்கு பேரிடர் நிவாரண நிதியாக ரூ. 1000 கோடியை வழங்க வேல்முருகன் கோரிக்கை
சென்னை: கன மழை வெள்ளத்தில் மூழ்கிய கடலூர் மாவட்டத்தை பேரிடர் பாதிப்பு மாவட்டமாக அறிவித்திட வேண்டும். இயற்கை பேரிடர்கள் தொடர்ந்து தாக்கும் கடலூர் மாவட்டத்துக்கு பேரிடர் நிவாரண நிதியாக ரூ1,000 கோடி வழங்கிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரி்மைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுநிலையால் கொட்டிய பெருங்கனமழையால் கடலூர் மாவட்டமே வெள்ளக்காடாக மூழ்கிக் கிடக்கிறது. இதுவரை 28 பேர் வெள்ளத்தால் உயிரிழந்துள்ளது பெரும் வேதனையையும் துயரத்தையும் ஏற்படுத்துகிறது.
கடலூர் மாவட்டமே உருக்குலைந்து போய் கிடக்கிறது....ஒரு மாதத்தில் கொட்டித் தீர்க்க வேண்டிய கனமழை 2 நாட்களில் கொட்டிச் சென்றதால் இந்த பெருந்துயரம் நிகழ்ந்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் அடுத்தடுத்து ஆழிப்பேரலையின் பேரழிவு, தானே புயலின் கோரத் தாண்டவம் இவற்றில் இருந்து கடலூர் மாவட்டம் இன்னமும் மீளவே இல்லை. இந்த நிலையில் இயற்கை மீண்டும் கோர தாண்டவமாடி கடலூரை கண்ணீர் கடலில் மிதக்க விட்டுச் சென்றுள்ளது.
தமிழக அரசு உடனடியாக நிவாரணப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருவதையும் அமைச்சர்கள், அதிகாரிகள் குழு முகாமிட்டிருப்பதையும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் அறிவித்திருக்கிறார்கள். மேலும் வெள்ளத்தால் உயிரிழந்தோருக்கு தலா ரூ4 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் எனவும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் அறிவித்துள்ளதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி நன்றி தெரிவித்துக் கொள்கிறது.
கடலூர் மாவட்டம் தொடர்ந்து இந்த பெரும் இயற்கைத் தாக்குதல்களுக்கு உயிர்களை பலி கொடுத்து கொண்டிருப்பதால் இந்த நிவாரண உதவியை மேலும் அதிகரித்து வழங்க வேண்டும் என்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
அத்துடன் பாதிக்கப்பட்ட அனைத்து வகை வேளாண் பயிர்களுக்கும், முந்திரி, பலா உள்ளிட்ட பணப் பயிர்களுக்கும், உயிரிழந்த கால்நடைகளுக்கும், அடித்துச் செல்லப்பட்ட நூற்றுக்கணக்கான மீன்பிடி படகுகளுக்கும் இதர உடைமைகளை பறிகொடுத்தோருக்கும் உரிய நிதி உதவியையும் தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும் வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.
ஏற்கனவே ஆழிப்பேரலையால் பெரும் பேரழிவைச் சந்தித்தது கடலூர் மாவட்டம்... நூற்றுக்கணக்கான உயிர்கள் பறிபோனது... அதன் பின்னர் தானே பெரும் புயலால் கடலூர் மாவட்டமே அழிந்து போனது.... எண்ணற்ற உயிர்கள் பலியாகின...நூற்றாண்டுகால முந்திரி மரங்கள் எல்லாம் வேரோடு சாய்ந்து அதனையே வாழ்வாதரமாக கொண்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ள வேண்டிய துயரம் ஏற்பட்டது.
தானே புயல் பேரவலத்தின் போது பேரிடர் மதிப்பீட்டுக்கான ஒரு குழுவை மத்திய அரசு அனுப்பியதோடு சரி... ஆனால் வரை மத்திய அரசு உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்கவில்லை. தற்போதும் இயற்கை பேரிடரால் பெரும் துயரத்துத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது கடலூர் மாவட்டம். ஆனால் மத்திய அரசு பேரிடர் மீட்புக் குழுவை அனுப்பாமல் பாராமுகமாகவே இருந்து வருவது கடும் கண்டனத்துக்குரியது.
கடலூர் மாவட்டம் தொடர்ந்து இயற்கை பேரிடர்களால் அழிந்து வரும் நிலையில் மத்திய அரசு உடனடியாக ரூ1,000 கோடியை பேரிடர் நிவாரண நிதியாக தமிழக அரசுக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.
அத்துடன் தொடர்ச்சியாக இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்டு வரும் கடலூர் மாவட்டத்தை பேரிடர் பாதிப்பு மாவட்டமாக அறிவிக்க மத்திய அரசு உடனே அறிவிக்க வேண்டும்; அத்துடன் கடலூர் மாவட்டத்தை மையமாக கொண்டு இயற்கை பேரிடர் மையம் ஒன்றையும் உடனே அமைக்க வேண்டும்; இதற்கு தமிழக அரசு, மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் வேண்டி கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications