போக்குவரத்து நெரிசல் - பாபநாசம் அகஸ்தியர் அருவிக்கு செல்ல திடீர் தடை
பாபநாசம்: கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பாபநாசம் அகஸ்தியர் அருவிக்கு செல்ல வனத்துறையினர் திடீர் தடை விதித்தனர். இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் பல அருவிகள் உள்ளன. களக்காடு பகுதியில் உள்ள அருவிகளில் மழை காலங்களில் மட்டும் தண்ணீர் கொட்டும்.
குற்றாலத்தில் சீசன் காலத்தில் மட்டும் மழை தலை காட்டும். ஆனால் பாபநாசம் மலையில் உள்ள பாணதீர்த்த அருவி, அகஸ்தியர் அருவி ஆகியவற்றில் ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டும். இதில் பாணதீர்த்த அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க ஏற்கனவே வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
இதனால் சுற்றுலா பயணிகள் அகஸ்தியர் அருவியை முற்றுகையிட்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது குற்றால சீசன் நன்றாக இருப்பதால் பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
பலரும் சொந்த வாகனத்தில் வந்துள்ளனர். அவர்கள் குற்றாலத்தில் ஆனந்த குளியல் போட்டுவிட்டு வாகனங்களில் அப்படியே அகஸ்தியர் அருவி நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
வாகனங்களை அப்படியே அருவி பகுதியில் நிறுத்தி விட்டு செல்வதால் அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் அகஸ்தியர் அருவிக்கு மற்றவர்கள் செல்ல முடியவில்லை.
இந்த தகவல் கிடைத்ததும் அப்பகுதிக்கு விரைந்து வந்த முண்டத்துறை புலிகள் காப்பக இயக்குனர் காஞ்சனா உடனடியாக அகஸ்தியர் அருவிக்கு வரும் வாகனங்களை பாபநாசம் வனத்துறை சோதனை சாவடியில் நிறுத்துமாறு உத்தரவி்ட்டார்.
இதனை தொடர்ந்து அகஸ்தியர் அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் வெளியூரிலிருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.