கடலோர பாதுகாப்பை பலப்படுத்த வருகிறது பாராசூட் படை.. கடற்கரையை கண்காணிக்க புதிய திட்டம்
சென்னை : கடலோர பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக கடற்கரையை ‘பாராசூட்' மூலம் கண்காணிக்கும் புதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழக கடலோர காவல்படை கடலோர பாதுகாப்பை பலப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இப்போது ஒரு புதிய திட்டமாக கடற்கரையை பாராசூட் மூலம் கண்காணிப்பதற்கு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

சென்னை மெரினா கடற்கரையில் நேற்று பாராசூட்டில் பறந்தபடியே வீரர் ஒருவர் கடற்கரையை கண்காணிக்கும் பாதுகாப்பு ஒத்திகை மற்றும் பயிற்சி நடத்தப்பட்டது. இதில் தமிழக கடலோர காவல்படை வீரர்கள் கலந்து கொண்டனர்.
கோவையில் உள்ள இந்திய வான் விளையாட்டு அறிவியல் மையத்தை சேர்ந்த பயிற்சியாளர்கள் வீரர்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர்.
ஏற்கனவே கடற்கரையை சுற்றிவர ரோந்து வாகனம் வழங்கப்பட்டுள்ளது. அந்த வாகனத்தில் பாராசூட் இணைக்கப்படும். வாகனம் வேகமாக ஓடத்தொடங்கியதும் பாராசூட் மேலே பறக்கும். அதில் இருக்கும் வீரர் மேலே இருந்தபடி கடற்கரை முழுவதையும் கண்காணிப்பார். அவரது கையில் பொருத்தப்பட்டு இருக்கும் கேமரா மூலம் கடற்கரையில் நடப்பவை பதிவு செய்யப்படும்.
இந்த புதிய திட்டம் குறித்து கடலோர காவல்படை துணை கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது...
இந்த புதிய திட்டத்தில் கடலோர காவல்படை சிறப்பு கமாண்டோ வீரர்களை பயன்படுத்த இருக்கிறோம். இதற்காக 30 கமாண்டோ வீரர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள 13 கடலோர மாவட்டங்களிலும் இந்த திட்டம் அமல்படுத்தப்படும்.
இதன் மூலம் கடலில் தொலைதூரத்தில் ஒருவர் தத்தளித்துக் கொண்டு இருந்தால்கூட அவரை பாராசூட்டில் இருக்கும் வீரர் பார்த்து தகவல் தெரிவிப்பார். கடற்கரை பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்று விடாமல் இருப்பதற்காகவும், அதுபோன்ற செயலில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிப்பதற்கும் இந்த திட்டம் உதவும்.
இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications