ராம்குமார் பிரேத பரிசோதனை… அறிக்கை, வீடியோ கேட்டு பரமசிவம் ஐகோர்ட்டில் மனு
சென்னை: புழல் சிறையில் மர்மமான முறையில் மரணமடைந்த ராம்குமாரின் பிரேத பரிசோதனையின் போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கையை தன்னிடம் அளிக்கக் கோரி ராம்குமாரின் தந்தை பரமசிவம் மனு ஒன்றை சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ளார்.
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் திடீரென சென்ற மாதம் 18ம் தேதி மின் கம்பியை வாயால் கடித்து தற்கொலை செய்துக் கொண்டார் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் இதனை நம்ப மறுத்த அவரது தந்தை பரமசிவம், ராம்குமார் கொலை செய்யப்பட்டுள்ளதாக வெளிப்படையாக கூறினார்.
மேலும் ராம்குமாரின் பிரேத பரிசோதனையின் போது தனியார் மருத்துவர் ஒருவர் இருக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்டில் மனு தாக்கல் செய்தார். பரமசிவத்தின் இந்த சாதாரண கோரிக்கை சுப்ரீம் கோர்ட் வரை இழுத்தடிக்கப்பட்டு முடிவில் சென்னை ஐகோர்ட்டில் 3வது நீதிபதி கிருபாகரன் கொடுத்த தீர்ப்பின் படியே டெல்லி எய்ம்ஸ் மருத்துவர் சுதிர் குப்தா முன்னிலையில் கடந்த 30ம் தேதி ராம்குமாரின் பிரேத பரிசோதனை நடைபெற்றது.
இந்நிலையில், ராம்குமார் உடல் பிரேத பரிசோதனையின் அறிக்கை, பிரேத பரிசோதனை செய்த போது எடுக்கப்பட்ட முழு வீடியோ மற்றும் புகைப்படம் ஆகியவற்றை தன்னிடம் அளிக்க வேண்டும் என்று ராம்குமாரின் தந்தை பரமசிவம் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
ராம்குமாரின் தந்தை பரமசிவம் சார்பில் வழக்கறிஞர் ரமேஷ் சென்னை ஐகோர்ட் நீதிபதி கிருபாகரனிடம் இன்று முறையீடு செய்துள்ளார்.