பாடம் சொல்லித் தராமல் "ஓபி" அடித்த எச்.எம்... டிரான்ஸ்பர் செய்யக் கோரி பெற்றோர்கள் போராட்டம்
நாமக்கல்: சரியாக பாடம் சொல்லி கொடுகாத அரசு பள்ளி தலைமை ஆசிரியையை இடமாற்றம் செய்யக்கோரி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் அருகே உள்ள கருப்பட்டிபாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் தலைமை ஆசிரியையாக பொன்மதி என்பவர் இருக்கிறார். இதே பள்ளியில் பணியாற்றி வந்த மற்றொரு ஆசிரியை மலர்க்கொடி மாற்றுப்பணிக்காக தாளம்பாடி பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளார்.

தற்போது தலைமை ஆசிரியை மட்டுமே பள்ளியை கவனித்து வரும் நிலையில், இவர்மாணவர்களுக்கு சரியாக பாடம் சொல்லி கொடுப்பது இல்லை என புகார் எழுந்தது. அதையடுத்து பெற்றோர்கள் நேற்று மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம் குறித்து பெற்றோர்கள் கூறும்போது, இந்த பள்ளியில் கடந்த ஆண்டு 25 மாணவ, மாணவிகள் படித்து வந்தனர். தற்போது 12 மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியை சரியாக பாடம் நடத்தாததே க்காரணம். இதனால் தான் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. எனவே தலைமை ஆசிரியையை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றனர்.
பெற்றோர்களின் குற்றச்சாட்டு குறித்து தலைமை ஆசிரியை பொன்மதி கூறுகையில், பள்ளி புரவலர் திட்ட நிதி தன்னிடம் இதுவரை முறையாக ஒப்படைக்கப்படவில்லை. மேலும் பள்ளியில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இவை எல்லாவற்றையும் தாண்டி மாணவர்களுக்கு நாள் தவறாமல் வகுப்பறைக்கு சென்று பாடம் எடுத்து வருகிறேன். என் மீது வீண்பழி சுமத்துகிறார்கள் என்றார்.
இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த உதவி தொடக்கக் கல்வி அலுவலர் மாதவன், அப்பகுதி கவுன்சிலர் ரவிச்சந்திரன் ஆகியோர் மாணவர்களின் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்களின் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தி, மேல் அதிகாரிகளின் பார்வைக்குஅறிக்கை அனுப்பி வைக்கப்படும் என மாதவன் கூறினார்.
அதனையடுத்து சமாதானம் அடைந்த பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். இதனால் நேற்று காலை பள்ளி வகுப்புகள் சுமார் 1 மணி நேரம் தாமதமாக தொடங்கின. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications