மாணவர்களை கால் பிடித்து விடச் சொன்ன தலைமையாசிரியை - பெற்றோர் போராட்டம்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், திருமங்கலம் அருகே அரசு பள்ளியில் இருந்து தலைமையாசிரியையை இடமாற்றம் செய்யக் கோரி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.
திருமங்கலத்திலிருந்து விருதுநகர் செல்லும் வழியில் உள்ளது ராயபாளையம் கிராமம். இந்த கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி ஒன்று உள்ளது. அந்த பள்ளியில் 40 குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று, அந்த கிராமத்தில் உள்ள குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் அங்குள்ள ஒரு பெருமாள் கோவிலில் தங்களது பெற்றோருடன் அமர்ந்திருந்து போராட்டம் நடத்தினர். உடனே இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த திருமங்கலம் தாலுகா போலீசார் மற்றும் நெடுஞ்சாலை பிரிவு போலீசார் குழந்தைகளின் பெற்றோரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது அவர்கள், பள்ளி தலைமையாசிரியை லதாதேவி, தங்கள் குழந்தைகளை தரக்குறைவாக பேசுவதாக புகார் கூறினர். மேலும் தண்ணீர் பிடிக்கச் சொல்லுதல், டீ வாங்கச் சொல்லுதல், கால் பிடித்து விடச் சொல்லுதல் என வேலை வாங்குவதாகவும் தெரிவித்தனர். எனவே அவரை பணி இடமாற்றம் செய்யக்கோரி போராட்டம் நடத்துவதாகவும் கூறினர்.
தலைமையாசிரியையை இடமாற்றம் செய்யும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்தப்போவதாகவும் கூறினர். பின்னர் அங்கிருந்து குழந்தைகளும், பெற்றோரும் கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக நேற்று பள்ளி திறக் கப்படவில்லை.
மேலும் இது குறித்து அப்பகுதியினர் கூறும்போது, இந்த பள்ளி தொடங்கப்பட்டு சுமார் 12 வருடங்கள் ஆகின்றன. ஆரம்பத்தில் இந்த பள்ளியில் 300-க்கும் மேற்பட்டோர் படித்து வந்தனர். அந்த எண்ணிக்கை நாளடைவில் குறைந்து தற்போது 40 பேர் தான் படிக்கின்றனர். இதற்கு காரணம் தலைமையாசிரியை குழந்தைகளிடம் வேறுபாடாக நடப்பதே ஆகும். அதனால் தான் பெற்றோர்கள், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுக்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.












Click it and Unblock the Notifications