என்எல்சி தொழிலாளர்கள் உண்ணாவிரதம் வாபஸ்: கட்சிகள் சார்பில் அக்.9ல் என்எல்சி முற்றுகை
கடலூர்: மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தைக்கு அழைத்தைத் தொடர்ந்து என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.
பணிநிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட 6 அம்சக் கோரிக்கை களை வலியுறுத்தி போராடி வரும் என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக இம்மாதம் 9ம் தேதி மாவட்ட அளவில் அனைத்துக் கட்சி மற்றும் தொழிற்சங்கம் சார்பில் என்எல்சி தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவது என அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பணிநிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து ஒப்பந்தத் தொழிலாளர் சங்கங்கள் சார்பில் விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில் செப்டம்பர் 3 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் திமுக மாவட்டச் செயலரும் முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் நெய்வேலி தொமுச அலுவலகத்தில் நேற்று அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் காங்கிரஸ், பாமக, பாஜக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மதிமுக, தேமுதிக, விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் எஸ்யுசிஐ உள்ளிட்டக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், ஒப்பந்தத் தொழிலாளர்களின் கோரிக்கை களை நிறைவேற்ற வலியுறுத்தி அனைத்துக் கட்சி மற்றும் தொழிற்சங்கங்கள் சார்பில் அக்டோபர் 9ம் தேதி என்எல்சி தலைமை அலுவலகத்தை முற்றுகையிடுவது எனவும், அதைத்தொடர்ந்து அக்டோபர் 11ம்தேதி மாவட்டத் தலைநகரான கடலூரில் ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
உண்ணாவிரதம் வாபஸ்
இதனிடையே மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தைக்கு அழைத்தைத் தொடர்ந்து என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 33 நாட்களாக என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையடுத்து, தொழிற்சங்க நிர்வாகிகளுடன் நடந்த பல்வேறு பேச்சு வார்த்தைகள் தோல்வி அடைந்துள்ளது.இந்நிலையில், தற்காலிக பணியாளர்களை என்.எல்.சி. நிர்வாகம் பணியில் ஈடுபடுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 3 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், கடலூர் மாவட்ட ஆட்சியர் 5ஆம் தேதி மாலை 4 மணிக்கு பேச்சு வார்த்தைக்கு வருமாறு உண்ணாவிரதம் இருந்தவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து, கடந்த 3 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டனர்.












Click it and Unblock the Notifications