தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இன்று கனமழை பெய்யும்: சொல்கிறார் ரமணன்
சென்னை: தெற்கு ஆந்திரா, வட தமிழக வங்கக் கடலில் தீவிர காற்றழுத்த தாழ்வு நிலை உள்ளதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இன்று மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த ஒரு வார காலமாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு நிலை ஆந்திரா நோக்கி நகர்ந்து சென்றுள்ளது.

இந்நிலையில் இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
திங்கட்கிழமை வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வுநிலை தெற்கு ஆந்திரா மற்றும் வடதமிழக வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது. அது வடக்கு, வடமேற்கு திசை நோக்கி நகரக்கூடும்.
இதனால் இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும். இனி மழையின் அளவு படிப்படியாக குறைந்துவிடும்.
வடகிழக்கு பருவமழை காலத்தில் பெய்யக்கூடிய மழை பெய்யும். ஆந்திர கடல் பகுதியில் தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி இருப்பதால் வட தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்கையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றார்.
இந்நிலையில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று புனே வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் மேற்கு பகுதியில் புதிய தாழ்வு நிலை உருவாகியுள்ளது என்று அது மேலும் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications