அரசு பஸ் ஸ்டிரைக்... தனியார் பஸ்களில் கட்டண கொள்ளை - பயணிகள் அவதி
அரசு பஸ் ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை சமாளிக்க தனியார் பேருந்துகளை அதிகம் இயக்கப்பட்டன. ஆனால் அவை கட்டண கொள்ளையில் ஈடுபட்டதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சென்னை: அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக வெளியூர்களுக்கு தனியார் பேருந்துகளை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன் மூலம் தனியார் பேருந்துகள் கொள்ளை லாபம் பார்ப்பதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் ஒன்றிரண்டு அரசு பேருந்துகள் மட்டுமே இயங்கி வருவதால் பயணிகள் அவதியடைந்தனர். பொதுமக்கள் ரயில்களில் அதிகளவில் பயணித்ததால், ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
கட்டண கொள்ளை
தனியார் பேருந்துகளிலும் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. தனியார் பேருந்துகள் குறைவாகவே இயக்கப்படுவது ஒருபுறம் இருக்க இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கட்டணம் வசூல்
கோவையில் 25 சதவீத அரசு பேருந்துகள் மட்டுமே இயங்கியது. இதனால், சிங்காநல்லூர், காந்திபுரம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில், அதிகளவில் காத்திருந்த பொதுமக்கள் தனியார் ஆம்னி பேருந்துகள், சிறப்பு தனியார் பேருந்துகள் ஆட்டோக்கள், கால் டாக்ஸி ஆகிய வாகனங்களில் பயணம் செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
பயணிகள் தவிப்பு
தூத்துக்குடி பணிமனையில் இருந்து 30 சதவீத பேருந்துகள் மட்டுமே இயங்கின. மதுரை, திருச்சி கோவை, கும்பகோணம் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளுக்கு பேருந்துகள் இல்லாததால் பயணிகள் குடும்பத்துடன் பேருந்து நிலையத்தில் தவித்து வருகின்றனர்.
தனியார் பேருந்துகள்
ஈரோட்டில் அரசுப் பேருந்துகள் மிகவும் குறைந்த அளவிலேயே இயக்கப்படும் நிலையில், தனியார் பேருந்துகள் வழக்கத்தை விட கூடுதலாக இயக்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலான அரசுப் பேருந்துகள் பணிமனைகளில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால், பயணிகள் தனியார் பேருந்துகளிலேயே பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மினி பேருந்துகள்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து பேருந்துகள் இயக்கப்படாததால் அண்ணா மற்றும் வடசேரி பேருந்து நிலையங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன. புறநகர் பேருந்து சேவை முடங்கிய நிலையில் கேரள அரசு பேருந்துகளும் குமரி மாவட்டத்துக்கு வரவில்லை வெளியூர் பயணிகள், வேலைக்கு செல்வோர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதனை சாதகமாக்கிக் கொண்டு ஆட்டோ மற்றும் மினி பேருந்துகள் பல மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் பேருந்து இல்லாமல் வெளியூர் வாசிகள் மனிக்கணக்காக காத்துக் கிடந்தனர். இதையடுத்து அங்கு வந்த தனியார் பேருந்துகள் சென்னை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களுக்கு அனுப்பப்பட்டன. ஒரு பேருந்தில் 2 மடங்குக்கு மேலாக ஆட்களுக்கு மேலாக ஓட்டுநர்களும், நடத்துநர்களும் பொறுப்பற்ற முறையில் நடந்துக் கொண்டதாக பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர்.
பாதுகாப்பற்ற பயணம்
அதேபோல் திருவாரூர், கடலூர், சிதம்பரத்தில் இருந்து தனியார் மினி பேருந்துகளை சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட வெளியூர்களுக்கு இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதிகளவில் கட்டணத்தை கொடுத்ததும் இல்லாமல் பாதுகாப்பற்ற முறைக்கு தள்ளப்பட்டனர்.
வெளியூர்வாசிகள் அவதி
ராமநாதபுரத்தில் 95 சதவீத அரசுப் பேருந்துகள் இயக்கப்படாததால், பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். தனியார் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதால், பயணிகள் பல மணி நேரம் பேருந்து நிலையத்திலேயே காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அரசு பேருந்துகள் ஓடாததால் நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் வெகு நேரமாக காத்திருந்த வெளியூர் வாசிகள் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
எப்போது முடியும்
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் எப்போது முடியும் என்று தெரியவில்லை. விடுமுறைக்கு ஊருக்கு சென்றவர்களும், கோடை வாசஸ்தலங்களுக்கு சுற்றுலா சென்றவர்களும் கடும் தவிப்பில் ஆழ்ந்துள்ளனர்.