மேடு, பள்ள சாலையில் ஓடி டயர்டாகி .. .பஸ்சை விட்டு தனியே ஓடிய டயர்... பயணிகள் பீதி!
நாகப்பட்டினத்தில் அரசு பஸ் டயர் கழன்று தனியாக ஓடியதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
நாகப்பட்டினம் : நாகப்பட்டினத்தில் அரசு பஸ் டயர் தனியாக கழன்று ஓடியதால் பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
நாகையில் இருந்து அரசு பஸ் ஒன்று கும்பகோணத்திற்கு புறப்பட்டு சென்றது. அகரகடம்பனூரை சேர்ந்த பாலகுரு என்பவர் பேருந்தை ஓட்டி சென்றுள்ளார். சுமார் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது. கீழ்வேளூர் பஸ் நிறுத்தத்தின் அருகில் அரசாணி குளம் பகுதியில் ஒரு வளைவில் பஸ் திரும்பியது.
அப்போது பேருந்தின் முன்னால் டயர் ஒன்று வேகமாக உருண்டு சென்று புதருக்குள் விழுவதை கண்ட டிரைவர் அதிர்ச்சியடைந்தார். அது தனது பஸ்சின் முன்பக்க டயர் தான் என்பதையும், அது எப்படியோ கழன்று ஓடி புதருக்குள் விழுந்துள்ளது என்பதையும் உணர்ந்த டிரைவர் பாலகுரு உடனடியாக சமயோஜிதமாக பஸ்சை சாலையோரம் பாதுகாப்பாக நிறுத்தினார்.
அந்த சமயத்தில் பஸ் ஒரு பக்கமாக நிலை தடுமாறியதால் பயணிகள் அலறினர். இருப்பினும் பஸ் உடனடியாக நின்றதால் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பின்னர் பயணிகள் இறக்கிவிடப்பட்டு மாற்று பஸ்சில் ஏற்றிவிடப்பட்டனர்.
மிகப்பெரும் அசம்பாவிதத்தில் இருந்து பேருந்தை சாமர்த்தியமாக நிறுத்திய டிரைவர் பாலகுருவை பயணிகள் பாராட்டி சென்றனர். டயர் தனியாக கழன்று ஓடியதை பார்த்த அந்த பகுதி மக்கள் அலறியடித்து ஓடினர்.