"காந்தியின் முதுமையை சொல்லி அவரை திட்டினார் சர்தார் வல்லபாய் படேல்...!"
சென்னை: மகாத்மா காந்தியின் கடைசிக்காலத்தில், அவரது முதுமையைச் சொல்லி இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேல் திட்டினார் என்று காந்தியின் கடைசிக்காலத்தில் அவரது உதவியாளராக இருந்த கல்யாணம் கூறியுள்ளார்.
மேலும் காந்தியின் கடைசி நாட்களில் அவரது சொல்பேச்சை பலர் கேட்கவில்லை என்றும் கல்யாணம் கூறியுள்ளார்.
காந்தியிடம் நேர்முக உதவியாளராக இருந்தவர் கல்யாணம். காந்தியின் கடைசி நாட்கள் குறித்து இவர் தற்போது மனம் திறந்து பேசியுள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தின் 150-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, கோர்ட் வளாகத்தில் உள்ள ‘மெட்ராஸ் பார் அசோசியேஷன்' என்ற வக்கீல் சங்கம் தொடர் கருத்தரங்கு நடத்தி வருகிறது.
காந்தியின் கடைசி நாள் என்ற தலைப்பில் மகாத்மா காந்தியிடம் தனிச்செயலாளராக பணியாற்றிய வி.கல்யாணம் உரையாற்றும் கருத்தரங்கு நேற்று நடந்தது. அப்போது கல்யாணம் பேசியதாவது...
மரணத்தின் நுழைவாயிலில்
1948-ம் ஆண்டு ஜனவரி 30-ந் தேதி காந்தியை கோட்சே சுட்டுக்கொலை செய்தார். அன்று காலையில் வழக்கம்போல் 3.30 மணிக்கு காந்தி எழுந்தார். தினமும் அவருக்கு குறைந்தது 50 கடிதங்களாவது அப்போது வரும்.
அமைச்சர்கள் மீது புகார் கூறி கடிதங்கள்
அந்த கடிதங்களில் பெரும்பாலானவை மத்திய அமைச்சர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கும். அமைச்சர்கள் சொகுசான வாழ்க்கை வாழ்கின்றனர். மக்களை பார்ப்பது இல்லை. இப்படி ஏராளமான புகார்கள் வரும். அதற்கெல்லாம் காந்தி பதில் எழுதுவார். அன்றும் அதுபோலத்தான் பதில் கடிதம் எழுதினார்.
நேருவுக்கும் படேலுக்கும் லடாய்
அந்த காலக்கட்டத்தில் ஜவஹர்லால் நேருவுக்கும், சர்தார் வல்லபாய் பட்டேலுக்கும் கருத்து வேறுபாடு இருந்தது. இதனால், படேலை காந்தி நேரில் அழைத்தார்.
காரசாரமாக பேசிய படேல்
அன்று மாலை 5 மணிக்கு பிரார்த்தனைக்கு செல்லவேண்டும். ஆனால், படேலுக்கும், காந்திக்கும் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடந்தது. இதன் பின்னர் படேல் புறப்பட்டு சென்ற பின்னர், 5.10 மணிக்கு காந்தி பிரார்த்தனைக்கு வந்தார். அவருடன் இருபுறமும் பெண்கள் இருந்தனர். அவர்களுக்கு நெருக்கமாக நான் வந்துகொண்டிருந்தேன்.
கோட்சே சுட்டார்
அப்போது, திடீரென கோட்சே வந்து துப்பாக்கியால் சுட்டார். கோட்சே சுட்டவுடன், காந்தி சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். அவர் இறக்கும்போது ஹே ராம் என்றெல்லாம் சொலலவில்லை. ஆனால், பக்கத்தில் இருந்தவர்கள் யாராவது, ஹேராம் என்று சொல்லியிருக்கலாம். அதுபற்றி எனக்கு தெரியாது.
காந்தியைத் திட்டிய படேல்
கடைசி நாட்களில் படேல், காந்தியைத் திட்டியுள்ளார். காந்தியடிகளின் முதுமையைக் குறிப்பிட்டு இந்தியில் ஒரு வார்த்தையைப் பயன்படுத்தித் திட்டினார்.
காந்திக்கு மரியாதை இல்லை
மேலும், கடைசி நாட்களில் காந்தியின் சொல்லை பலர் மதிக்கவில்லை. ஏன், அவர் நாடு சுதந்திரமடைந்த பின்னர் காங்கிரஸ் கட்சியை கலைக்கவேண்டும் என்றார். அதைக்கூட இதுவரை யாரும் கேட்கவில்லையே என்றார் கல்யாணம்.