நீ ஓரக்கண்ணால் பார்த்தாலே நான் புள்ளத்தாச்சி...
ஆண் மயில் கண்ணீரால் பெண் மயில் கர்ப்பமாகும் என்று நீதிபதியே சொல்லிட்டார். அப்போ நீ ஒரக்கண்ணால் பார்த்தாலே நான் புள்ளத்தாச்சி என்று வைரமுத்து சொன்னது நிஜமாகிவிடும் போலிருக்கே.
சென்னை: பிரம்மாச்சாரி ஆண் மயில் என்றும் அது பெண் மயிலுடன் கூடுவதில்லை. ஆண் மயிலின் கண்ணீரால்தான் பெண் மயில் கர்ப்பமாகும் என்று அறிவியல் உண்மையை சொல்லிவிட்டார் ராஜஸ்தான் நீதிபதி மகேஷ் சந்திரா சர்மா. இணைய உலகில் இதுதான் ஹாட் டாபிக். பெண்கள் கர்ப்பமாவது பற்றி கவிஞர்கள் எத்தனையோ எழுதியுள்ளனர். உசிலம்பட்டி பெண்குட்டி முத்துப்பேச்சி... நீ ஒரக்கண்ணால் பார்த்தாலே நான் புள்ளத்தாச்சி என்று பாடியதை அன்று பலரும் கிண்டலடித்தனர். இன்றைக்கு அது கூட உண்மைதானோ என்று பேசத்தொடங்கியுள்ளனர்.
ராஜஸ்தான் நீதிபதி மகேஷ் சந்திரா சர்மா இந்திய செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு பிரத்யேகமாக அளித்த பேட்டியில்,
பசுவை தேசிய விலங்காக அறிவிக்கலாம். ஆனால் மயிலை தேசிய பறவையாக அறிவித்திருக்கிறார்கள் என்று கூறிய நீதிபதி அதோடு நிறுத்தியிருக்கலாம்.
வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சாரியாக இருப்பதால்தான் மயில் இந்தியாவின் தேசிய பறவையாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று வாயை கொடுத்து வம்பாக மாட்டிக்கொண்டார்.
மயிலின் கண்ணீர்
ஆண் மயிலின் கண்ணீர்த் துளிகளால்தான் பெண் மயில் கர்ப்பமாகும். மயில்கள் எப்போதும் உடலுறவு கொள்வதில்லை என்று ஒரே போடாக போட்டார் நீதிபதி.
கிருஷ்ணரின் சிரசில் மயில் தோகை
ஆண் மயில் பிரம்மச்சாரியாக இருப்பதால் கிருஷ்ண பகவானும், துறவிகள் பலரும் மயில்தோகைகளை பயன்படுத்துகின்றனர் என்றும் திருவாய் மலர்ந்தார் நீதிபதி மகேஷ் சந்திரா சர்மா.
கண்ணீர் சிந்தும் இணைய உலகம்
மகேஷ் சந்திர சர்மாவின் இந்த பேட்டியை படித்த பலரும் கண்களில் கண்ணீர் வர சிரித்துக்கொண்டிருக்கின்றனர். மீம்ஸ்கள் றெக்கை கட்டி பறக்கின்றன.
பெட்டையுடன் கூடும் மயில்
தோகை விரித்து ஆண் மயில் நடனமாடி பெண் மயிலை கவர்கிறது. பின்னர் பெட்டையின் மீதேறி அமர்ந்து கழுத்தை கவ்வி பிடித்து இணைகிறது. இதுதான் காலம் காலமாக நடக்கிறது. இப்படித்தான் கர்ப்பம் தரிக்கிறது பெண் மயில். ஆனால் நீதிபதியின் கூற்று வேறாக இருக்கிறதே என்று கேட்கின்றனர்.
நீ ஒரக்கண்ணால் பார்த்தலே
25 ஆண்டுகளுக்கு முன்பே 'உசிலம்பட்டி பெண்குட்டி முத்துப்பேச்சி... நீ ஓரக்கண்ணால் பார்த்தலே நான் புள்ளத்தாச்சி' என்ற தத்துவார்த்தமான பாடலை பலரையும் யோசிக்க வைத்தவர் கவிஞர் வைரமுத்து. அப்போது பலரும் பெண்களை ஓரக்கண்ணால் பார்க்காதீங்க என்றனர். இப்போதோ இனி யாரும் மயில்சாமி என்று பெயர் கொண்டவர்கள் கண்ணீர் விட்டால் பக்கத்தில் நிற்காதீர்கள் என்று பதிவிட்டு வருகின்றனர் பலரும்.
இனி என்னென்ன சொல்லப் போறாங்களோ... அம்புட்டு புத்திசாலிகளும் இந்தியாவில்தான் பிறந்திருக்காங்களோ!