பென்னி குவிக் பிறந்தநாள் விழா: கிராம மக்கள் பொங்கல் வைத்து வழிபாடு
முல்லை பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னி குவிக் 177வது பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் அருகே உள்ள பாலார்பட்டி கிராம மக்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
தேனி: தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் அருகே உள்ள பாலார்பட்டி கிராமத்தில் முல்லை பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னி குவிக் 177வது பிறந்த நாளை முன்னிட்டு கிராம மக்கள் சார்பில் பொங்கல் வைத்து வழிபட்டனர். இவ்விழாவில் பென்னிகுவிக் அவர்களின் வம்சாவளி உறவினர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
சாதி, மதம் கடந்து ஒட்டுமொத்த தமிழர்களும் உணர்வுபூர்வமாக கொண்டாடும் திருநாள், பொங்கல் பண்டிகை. சூரிய கடவுளுக்கும், கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் இத்திருநாளை சில பகுதிகளில் வித்தியாசமாகக் கொண்டாடுகிறார்கள்.
தேனி மாவட்டத்தில் பெரும்பாலான வீட்டு பூஜையறைகளில் அவர்களின் மூதாதையர் படங்கள் இருக்கிறதோ இல்லையோ, பென்னி குவிக் புகைப்படம் கட்டாயம் இருக்கும்
பென்னிகுவிக் உறவினர்கள்
தேனி அருகே கேரள எல்லையில் முல்லைபெரியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணையின் மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.
முல்லை பெரியாறு அணையை பார்வையிட வந்த பென்னிகுவிக் உறவினர் மற்றும் இங்கிலாந்து நாட்டின் பிரதிநிதிகளுக்கு தேனி மாவட்ட விவசாயிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பென்னி குவிக் வழிபாடு
இந்த அணையை கட்டியவர் இங்கிலாந்து பொறியாளர் பென்னிகுவிக். தேனி மாவட்ட மக்கள் இவரை கடவுளாக கருதுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15ஆம்தேதி பென்னிகுக் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் பள்ளத்தாக்கு இருபோக சாகுபடியால் பசுமையாக காண்பது விவசாயிகளுக்கு கிடைத்த பொக்கிஷமாக கருதி பென்னிகுவிக்கை இன்றும் நினைவு கூர்ந்து வருகிறார்கள்.
எனவேதான் தேனி மாவட்டத்தில் ஒவ்வொரு வீட்டிலும் பென்னிகுக் உருவப்படம் கட்டாயம் இடம்பெறும்.
பென்னிகுவிக் உறவினர்கள்
பென்னிகுவிக் அண்ணன் சார்லஸ் மகள் வழிப்பேத்தி டயானாஜீப் தமிழகம் வந்து பெரியாறு அணையை பார்க்க விரும்பினார். அதன்படி நேற்று டயானாஜீப், இங்கிலாந்து தேவாலய அமைச்சர் சரோன் பில்லி, லண்டன் புனிதபீட்டர் தேவாலய செயலாளர் சூசன்பெரோ, ஊடக ஆய்வாயர் ஜெய்னி மோரி ஆகியோர் தேனி மாவட்ட எல்லைப்பகுதியான லோயர்கேம்ப் வந்தனர்.
விவசாயிகள் நெகிழ்ச்சி
அங்கு அவர்களுக்கு விவசாயிகள் நெகிழ்ச்சியுடன் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பின்னர் மணிமண்டபத்தில் பென்னிகுக் சிலைக்கு மாலை அணிவித்தனர். அதன்பின்னர் அவர்கள் பெரியாறு அணைக்கு செல்வதற்காக தேக்கடி வந்தனர். அங்கு டயானாஜீப் மற்றும் அவருடன் வந்தவர்கள் படகு மூலம் முல்லைபெரியாறு அணையை பார்வையிட்டனர். அப்போது கடல் போல் காட்சியளித்த தண்ணீரை பார்த்ததும் அவர்கள் வியந்து போனார்கள்.
மெய்சிலிர்த்த பென்னி குவிக் பேத்தி
அணை கட்டுமானப்பணிகள் நடைபெறும்போது இறந்தவர்களை அடக்கம் செய்த பகுதியையும் அவர்கள் பார்த்து அஞ்சலி செய்தனர். தேனி மாவட்ட மக்கள் எங்கள் குடும்பத்தின் மீது வைத்திருக்கும் மரியாதை எங்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அடுத்தமுறை வரும்போது இங்கு எங்கள் குடும்பத்தின் ஒட்டுமொத்த உறுப்பினர்களையும் அழைத்து வருவேன். பென்னிகுவிக் செய்த காரியத்தால் இங்குள்ள விவசாயிகள் கடவுளாக நினைப்பதை பார்த்து நான் மெய்சிலிர்த்து போனேன் என்று கூறினார்.
பென்னி குவிக் பொங்கல்
பொங்கல் பென்னி குவிக் பிறந்த நாளான ஜனவரி 15ஆம் தேதி இருப்பதால், பாலார்பட்டி கிராம மக்கள் கடந்த 30 ஆண்டுகளாக பொங்கலை பென்னி குக் பொங்கலாகவே கொண்டாடுகிறார்கள். இந்த ஆண்டு பென்னிகுவிக் உறவினர்கள் சேலம் மாவட்டத்திற்கு வந்தது சிறப்பாகும்.
நன்றிக்கடன்
பொங்கலிட்டு முடிந்ததும் பானைக்கு ஒரு அகப்பை பொங்கல் எடுத்து, பென்னி குக்கிற்கு படையல் போடப்படும். பின் பென்னி குவிக் படத்தைச் சுமந்தவாறு ஊர்வலம் நடைபெறும். பாலார்பட்டியில் தொடங்கிய பென்னி குக் பொங்கல், இன்று தேனி மாவட்டம் முழுவதும் நடைபெறுகிறது. அவர் இல்லைன்னா இன்னைக்கு தேனி மாவட்டமே வரைபடத்தில் இருந்திருக்காது. அவர் போட்ட விதைதான் இன்னைக்கு எங்களுக்கு ஆகாரம். அவருக்கு தலைமுறை தலைமுறையா நாங்க நன்றிக்கடன் பட்டிருக்கோம் என்று வணங்குகின்றனர் விவசாயிகள்.