கடத்தல்... கொலைகள்... தீவிரவாதிகள் - டிரெண்ட் மாறும் டிவி சீரியல்கள்- தடை பண்ணுங்க!
சினிமாவில் வன்முறைகள் அதிகமாக உள்ளது என்ற விமர்சனம் முன் வைக்கப்படுகிறது. இப்போது டிவி சீரியல்களிலும் கொலை, பலாத்காரம், ஆள்கடத்தல் என அதிகரித்து வருகிறது.
சென்னை: மாமியார் மருமகள் சண்டை, அண்ணி, நாத்தனார் சண்டை என போய் கொண்டிருந்த டிவி சீரியல்கள் இப்போது கொலை, ஆள் கடத்தல், குண்டு வைப்பு என வன்முறை களத்தை நோக்கி திரும்பியுள்ளன. வீட்டுக்குள் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பார்த்து ரசிக்கும் சீரியல்களில் அதிகரிக்கும் வன்முறையால் வயதானவர்கள், குழந்தைகளின் மனநிலை பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர் மருத்துவர்கள்.
குழந்தைகள் முதல் மூத்த குடிமக்கள் வரை இன்றைக்கு தொலைக்காட்சிகளுக்கு அடிமையாகிக் கிடக்கின்றனர். காலை 9 மணி தொடங்கி இரவு 11 மணி வரை டிவி சீரியல்கள் ஒளிபரப்பாகின்றன.
இருதார மணம், கள்ளக்காதல், கொலைகள், ஆள் கடத்தல், கூட்டு பலாத்காரம் என சினிமாவை விட டிவி சீரியல்களில் காட்சிகள் அமைக்கப்படுவது அதிகரித்து விட்டது. சினிமா போல டிவி சீரியல்களையும் தணிக்கை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகிறது.

ஒருவீடு இரு வாசல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பகல்நிலவு சீரியல் அப்பட்டமாக மணிரத்னத்தின் அக்னி நட்சத்திரம்தான். ஆனாலும் இரு மனைவிகளுடன் ஒரே வீட்டில் வசிப்பது, கணவரின் முதல் மனைவியை கொலை செய்ய அண்ணனுடன் சேர்ந்து திட்டம் போடுவது என அதீத காட்சியமைப்புகள் கொடூரத்தின் உச்சம்.

பிரியமில்லாதவள்
பிரியமானவள் பெயர்தான் இப்படி ஆனால் சீரியலில் ஒவ்வொரு எபிசோடிலும் காட்சியமைப்புகள் வன்முறைகள் இல்லாமல் இருப்பதில்லை. போலீஸ் டிசி கிரி போடும் திட்டங்கள், ஈஸ்வரியின் கூட இருந்தே குழி பறிப்பது என காட்சிகள் வைக்கப்பட்டன. டிஆர்பி கிடைக்காததால் 10 மணிக்கு மேல் ஒளிபரப்பாகி வருகிறது.

அப்பாவை கொல்லும் மகன்
தோழியின் குடும்பத்தை கெடுத்த ஈஸ்வரியின் கணவர் அய்யாவுவை அவரது மகனே காலால் மிதித்து கொள்வது கொடூரம். ஒவ்வொரு முறையும் போலீஸ் கிரியை தப்ப விடுவது கமெடியின் உச்சம்.

கணவனையே கொல்வேன்
தனக்கு கிடைக்காதது வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது என்பது காயத்ரியின் எண்ணம். இதற்காக மாமனார், மாமியார், ஓரகத்தி, கொழுந்தன் என பழிவாங்கிய காயத்ரி. இப்போது கணவனையே கொல்ல துடிக்கிறாள்.

துடிக்க துடிக்க கொல்
வாணி ராணி எந்த நிலைக்கு போகிறது என்றே சொல்லத் தேவையில்லை. டிஆர்பியை அதிகரிக்க கூட்டு பலாத்காரம் தொடங்கி, கொலை, கொள்ளை என அதிகரித்து வருகிறது. மாமியார் மருமகள் சண்டை போட்டாகி விட்டது. பேயை கொண்டு வந்தும் ஒன்றும் பண்ண முடியவில்லை. எத்தனையோ பேரை வெட்டி விட்டாகி விட்டது. என்னதான் இழுத்தாலும் ஒன்றும் பண்ண முடியவில்லை. எப்படா முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர்.

பாம்பும் பேயும்
ஒரு பக்கம் குரூர புத்தியுடன் மனிதர்கள் நடமாடுகிறார்கள். வன்முறை சம்பவங்கள் ஒருபக்கம் அதிகரிக்க பேயும், பாம்பும் செய்யும் அட்டாகசங்கள் அதிகரித்து வருகிறது. மந்திரவாதி, பழிவாங்கும் பாம்பு ஒருபக்கம் கண்களை உருட்ட, பேயின் அட்டகாசமும் அதிகரித்து வருகிறது.

ரத்தம் வன்முறை
டிவி சீரியல்களில் ரத்தமும், வன்முறை காட்சிகளும் அதிகரிக்க அதிகரிக்க அதை பார்த்து பார்க்கும், குழந்தைகள், வயதானவர்களுக்கு பிபியும், சுகரும்தான் கூடுகிறது. இது போன்ற சீரியல்களை தடை செய்ய வேண்டும் அல்லது சினிமாவைப் போல டிவி சீரியல்களுக்கும் தணிக்கை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தற்போது வலுவடைந்து வருகிறது. பூனைக்கு மணி கட்டுவது யார்?












Click it and Unblock the Notifications