வடகிழக்கு பருவமழை எப்போது? மாறி மாறி குழப்பும் வானிலை மையங்கள்!
வடகிழக்கு பருவமழை குறித்து வானிலை மையங்கள் மாறி மாறி தகவல் தெரிவித்து வருவதால் மக்கள் குழப்பமடைந்துள்ளனர்.
சென்னை: வடகிழக்கு பருவமழை குறித்து வானிலை மையங்கள் மாறி மாறி தகவல் தெரிவித்து வருவதால் மக்கள் குழப்பமடைந்துள்ளனர்.
வடகிழக்கு பருவமழை நாட்டின் பெரும்பாலான மாநிலங்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும். குறிப்பாக தமிழகத்தின் தண்ணீர் பஞ்சத்துக்கு பெரும் வடிகாலாய் இருப்பது வடகிழக்கு பருவமழைதான்.
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சரிவர பெய்யாததால் தமிழகத்தில் கடுமையான வறட்சி ஏற்பட்டது. இதனால் ஆறுகள் குளங்கள் வறண்டதோடு, நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.
29ஆம் தேதி அன்றே
இதனால் இந்த ஆண்டாவது வடகிழக்குப் பருவமழை கைகொடுக்குமா என விவசாயிகள் எதிர்பார்த்து காத்துள்ளனர். கடந்த 29ஆம் தேதியே தென்மேற்கு பருவமழை விடைபெற்று அன்றே வடகிழக்கு பருவமழை தொடங்கி விடும் என தெரிவித்தது இந்திய வானிலை மையம்.
இன்று முதல் தொடங்கும்
ஆனால் இந்திய வானிலை மையம் சொன்னபடி வடகிழக்கு பருவமழை தொடங்கவில்லை. இந்நிலையில் 8 ஆம் தேதி முதல் அதாவது இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்றும் அதற்கு சாதகமான சூழல் நிலவி வருகிறது என்றும் சென்னை வானிலை மையம் கடந்த சனிக்கிழமை கூறியிருந்தது.
நாளைதான் தொடங்கும்
இதனால் இன்று எப்படியும் வடகிழக்கு பருவமழை தொடங்கி விடும் எதிர்பார்த்திருந்தனர் மக்கள். ஆனால் இன்று காலை அறிக்கை வெளியிட்ட இந்திய வானிலை மையம் வடகிழக்கு பருவமழை நாளை தொடங்கும் என தெரிவித்தது.
இப்போது இல்லை
சரி நாளையாவது வடகிழக்கு பருவமழை தொடங்கி விடும் என எதிர்பார்த்திருந்தனர் மக்கள். ஆனால் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் வடகிழக்கு பருவமழை இப்போது தொடங்க வாய்ப்பில்லை என கூறி கைவிரித்துவிட்டார்.
சாதகமான சூழல் இல்லை
அரபிக்கடலில் உருவாகியுள்ள லூபன் புயல் மற்றும் வங்கக்கடலில் உருவாக உள்ள புயல் காரணமாக காற்றின் திசையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் இதனால் வடகிழக்கு பருவமழைக்கு சாதகமான சூழல் மாறியிருப்பதாகவும் கூறியுள்ளார்.
மக்கள் குழப்பம்
இதனால் வடகிழக்கு பருவமழை இப்போதைக்கு இல்லை என்றும் இரண்டு புயல்களும் கரையை கடந்த பின்னர், வடகிழக்கு பருவமழை தொடங்க ஒரு வாரம் ஆகும் என்றும் தெரிவித்துள்ளார். இரு வானிலை மையங்களும் வடகிழக்கு பருவ மழை விவகாரத்தில் மாறி மாறி தகவல் தெரிவித்து வருவதால் மக்கள் குழப்பமடைந்துள்ளனர்.
குழப்பும் வானிலை மையங்கள்
இதுபோன்றுதான் தமிழகத்தில் மிக அதிக கனமழை பெய்யும் என ரெட் அலர்ட் விடுத்து மக்களிடம் பீதியை கிளப்பி குழப்பினார்கள். தற்போது வடகிழக்கு பருவமழை விஷயத்திலும் தொடர்ந்து மாறுபட்ட தகவல்களை தெரிவித்து வருவதால் மக்கள் எதை நம்புவது என தெரியாமல் குழம்பிப்போயுள்ளனர்.