தேங்கிய மழை நீர், கூடவே சாக்கடையும்.. வெளியில் கால் வைக்க முடியலை.. குமுறும் மக்கள்!
Recommended Video
சென்னை: மழை நீர் ஒரு பக்கம் தேங்கிக் கிடக்கும் நிலையில் மறுபக்கம் சாக்கடையும் அதனுடன் கலந்து வருவதால் மக்கள் பெரும் எரிச்சலுக்குள்ளாகியுள்ளனர்.
சென்னை முழுவதும் மழையால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஒரே நாளில் மக்களை முடக்கிப் போட்டு விட்டது மழை. பல பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல சூழ்ந்துள்ளது. பல பகுதிகளில் மக்கள் வீடுகளை விட்டு வர முடியாத அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது.
மழை நீர் வெள்ளத்தால் மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். பல பகுதிகளில் மழை வெள்ளம் வடியாமல் தேங்கிக் கிடப்பதால் பல்வேறு நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது. காரணம், அதில் கலந்து வரும் சாக்கடையா3ல்.
காட்டுப்பாக்கத்தில் தண்ணீர்
திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பாக்கம் கிராமப் பஞ்சாயத்துத்துக்குட்பட்ட பிஜி அவென்யூ முதல் தெருவிலிருந்து டி.ஜெகதீஸ்வரன் அனுப்பியுள்ள செய்தி: கன மழையால் எங்களது பகுதியில் தண்ணீர் தேங்கியுள்ளது. கூடவே சாக்கடையும், குப்பையும் கலந்து வருவதால் டெங்கு உள்ளிட்டை பரவும் அபாயம் அதிகரித்துள்ளது.
மழை நீர் வெளியேற வழியில்லை
எங்களது பகுதி தாழ்வான பகுதி. இங்கு முறையான கழிவு நீர், மழை நீர் வடிகால் வசதி இல்லை. மோட்டார் வைத்துத்தான் தண்ணீரை வெளியேற்ற வேண்டும். இதுகுறித்த நடவடிக்கையை பஞ்சாயத்து விரைந்து செய்தால் நல்லது என்று கூறியுள்ளார்.
மாடம்பாக்கத்தில் அவஸ்தை
மாடம்பாக்கம் சுதர்சன் நகர், முதல் மெயின் ரோடு விரிவாக்கப் பகுதியில் வசித்து வரும் வி.கிருபாகரன் அனுப்பியுள்ள தகவல் இது: எங்களது தெரு டெட் என்ட் உடையது. தெருவின் தொடக்கத்தில் சாலை உயரமாக உள்ளது. ஆனால் கடைசியில் அது பள்ளமாக உள்ளது. இதனால் மழை நீர் தேங்கிக் கிடக்கிறது.
தெருவில் தண்ணீர்
தெருவில் இரண்டரை அடி அளவுக்கு தண்ணீர் தேங்கிக் கிடக்கிறது. விடிய விடிய பெய்த மழையால் தெருவில் பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விட்டது. கடந்த 2015 வெள்ளத்தின்போதும், வர்தா புயல் தாக்கத்தின்போதும் இதே நிலைதான் ஏற்பட்டது.
கையெழுத்து இயக்கம் நடத்தியும்
இந்த நிலையை சரி செய்யக் கோரி 2 முறை கையெழுத்து இயக்கம் நடத்தி மாடம்பாக்கம் பஞ்சாயத்திடம் கொடுத்தோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறியுள்ளார் கிருபாகரன். இன்று பிற்பகல் 1 மணியளவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் நமக்கு அனுப்பி வைத்துள்ளார்.
துரைப்பாக்கத்தில்
துரைப்பாக்கம் சக்தி நகரைச் சேர்ந்த நமது வாசகர் ஆர். மணிகண்டன் நமக்கு அனுப்பியுள்ள தகவலில், இந்தியா கேட் ஹோட்டல் எதிரில் உள்ள தனியார் நிலத்தில் 2 அடி அளவுக்கு தண்ணீர் தேங்கிக் கிடப்பதாகவும், இதனால் அப்பகுதியில் கொசுக்கள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளர்.