திருப்பூர் அரசு கல்லூரி அருகே உள்ள மதுபானக் கடையை மூடுங்கள்... மக்கள் ஆவேசம்
திருப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மதுபானக் கடையை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரியுள்ளனர்.
திருப்பூர்: தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மதுபானக் கடைகளை அகற்ற வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டும் திருப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் அரசுக் கல்லூரிக்கு அருகே உள்ள மதுபானக் கடையை அகற்றவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக் கடைகளில் குடித்து விட்டு வாகனங்களை ஓட்டுவதால் பெரும் விபத்துகள் நிகழ்வதாக கூறி நெடுஞ்சாலைகளிலிருந்து 500 மீட்டர் தூரத்துக்குட்பட்ட மதுபானக் கடைகளை மார்ச் 31-ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்று கடந்த டிசம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவில் மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் மேல்முறையீடு செய்தனர். இருந்தும் சுப்ரீம் கோர்ட் உத்தரவின் படி ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தமிழக நெடுஞ்சாலைகளில் உள்ள 3000 மதுபானக் கடைகள் மூடப்பட்டன.
இந்நிலையில் திருப்பூரில் உள்ள சிக்கண்ணா அரசுக் கலைக் கல்லூரி அருகே உள்ள மதுபானக் கடையை சுப்ரீம் கோர்ட் உத்தரவிற்கிணங்க மூடவில்லை. இதற்கு கண்டனம் தெரிவித்த மக்கள் அந்த கடையை உடனே மூடுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கடை நெடுஞ்சாலை அருகே உள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.