சசிகலா முதல்வராவதை மக்கள் விரும்பவில்லை- ஜெ. தீபா
சசிகலா முதல்வராக தேர்வானது தமிழ்நாட்டுக்கு மிகமோசமான நாள், சசிகலா தமிழக முதல்வராக வருவதை மக்கள் விரும்பவில்லை என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா கூறியுள்ளார்.
சென்னை: சசிகலா முதல்வராக தேர்வு செய்யப்பட்ட பின்னர் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. பலமுனை தாக்குதல், விமர்சனங்கள் சசிகலாவிற்கு எதிராக கிளம்பி வருகின்றன. சசிகலா முதல்வராக தேர்வானது தமிழ்நாட்டுக்கு மிகமோசமான நாள். மக்கள் சசிகலாவை விரும்பவில்லை என்று என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கூறியுள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த தீபா, மக்கள் விரும்புவது சசிகலாவை அல்ல என ஏற்கனவே நான் தெரிவித்துள்ளேன். ஜெயலலிதா உடன் 33 ஆண்டுகள் இருந்தார் என்பதற்காக சசிகலாவை முதல்வராக ஏற்க முடியாது என்று கூறினார்.
தமக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவும் ஆலோசனையும் அளித்து வருகின்றனர். அனைத்து ஆலோசனைகளையும் தாம் கேட்டு வருவதாக தீபா கூறினார்.
பிப்ரவரி 24ஆம் தேதி முக்கிய அறிவிப்பு வெளியிடுவேன். மேலும் அரசியலில் இறங்குவது நிச்சயம் என்றார். ஜெயலலிதாவுக்கு மருத்துவ சிசிச்சை அளித்தபோது தன்னிடம் யாரும் கருத்தையும் கேட்கவில்லை என்று தீபா கூறியுள்ளார்.
தமது சுற்றுப்பயணத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தீபா புகார் கூறியுள்ளார். புதிய தலைவர்கள் உருவாக வேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் உள்ளது என்று கூறிய தீபா, சசிகலா முதல்வராக வருவதை மக்கள் ஒரு போதும் விரும்பவில்லை என்றும் கூறினார்.