ஏடிஎம்களில் ரூ.4500.. ஆங்காங்கே புதிய 500 ரூபாய் கிடைப்பதாக தகவல்!
பெரும்பாலானஏடிஎம்களில் இன்று 4500 ரூபாய் பணம் கிடைத்ததாக கூறப்படுகிறது. அதேசமயம். பல இடங்களில் வழக்கம் போல ஏடிஎம் மையங்கள் மூடியே உள்ளன. திறந்துள்ள மையங்களில் புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் கிடைப்பதாக
சென்னை : தமிழகம் முழுவதும் பெரும்பாலான ஏடிஎம்களில் இன்று 4500 ரூபாய் பணம் கிடைத்ததாக கூறப்படுகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ள போதிலும் கூட வழக்கம் போல பலஇடங்களில் ஏடிஎம் மையங்கள் மூடியே கிடக்கின்றன.
பிரதமர் மோடி கடந்த ஆண்டு நவம்பர் 8-ந் தேதி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது அறிவித்தார். அதற்கு பதிலாக 500, 2000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படும் எனவும் அவர் கூறினார்.
பொதுமக்கள் தங்களிடம் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்தி மாற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதனால் வங்கிகளில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
வங்கியில் இருந்து ரூ.10 ஆயிரமும், ஏ.டி.எம். மூலம் ரூ.2 ஆயிரமும் மட்டுமே எடுக்க முடியும் என மத்திய அரசு அறிவித்தது. பின்னர் வங்கி கணக்கில் இருந்து காசோலை மூலமாக 24000 ரூபாய் வரை எடுக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

பணத்துக்கு திண்டாட்டம்
பிரதமர் மோடியின் இந்த திடீர் அறிவிப்பால் நாடுமுழுவதும் பெரும் பணப்பற்றாக்குறை ஏற்பட்டது. வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். மையங்கள் முன்பு மக்கள் பணம் எடுக்க நீண்ட வரிசையில் காத்திருந்தனர். போதிய பணம் எடுக்க முடியாமல் பலர் திண்டாடினர்.

பணமிருந்தும் தவித்த மக்கள்
வங்கிக்கணக்கில் பணமிருந்தும் அதை எடுத்து செலவு செய்ய முடியாமல் மக்கள் தவித்தனர். மருத்துவ செலவு, சாப்பாடு உள்ளிட்ட அத்தியாவசிய செலவுகளுக்கு கூட பணம் இல்லாமல் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாயினர்.

நேற்றுடன் முடிந்த கெடு
பெரும்பாலான ஏடிஎம்கள் பணமில்லாமல் மூடிக்கிடந்த நிலையில், திறந்திருந்த ஒரு சில ஏடிஎம்களிலும் பணம் வைக்கப்பட்ட ஒரு சில நிமிடங்களில் தீர்ந்துப்போனது. இந்நிலையில் பணத் தட்டுப்பாட்டால் ஏற்பட்டுள்ள சிரமங்களை 50 நாட்கள் பொறுத்துக் கொள்ளும்படியும், அதன் பின்னர் நிலமை சீராகும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். இந்நிலையில் 50 நாள் கெடு முடிவடைந்தது. ஆனாலும் நிலைமை சரியாகவில்லை.

ரூ.4500 எடுத்த மக்கள்
இந்த நிலையில் ஏ.டி.எம். மையங்கள் மூலம் வழங்கப்படும் பணம் ரூ.2500-ல் இருந்து ரூ.4500ஆக இன்று முதல் உயர்த்தப்பட்டது.ஆனால் இது முழுமையாக பலன் தரவில்லை. வழக்கம் போல பெரும்பாலான பகுதிகளில் ஏடிஎம் மையங்கள் மூடியே கிடந்தன. பொன்னேரியில் பெரும்பாலான மையங்கள் மூடிக் கிடக்கின்றன. சில இடங்களில் 4500 ரூபாய் பணத்தை மக்கள் எடுத்தனர்.

நாளை முதல் தாராளமாக கிடைக்கும்
நாளை முதல் பெரும்பாலான ஏ.டி.எம். மையங்கள் செயல்படத் தொடங்கும் என்றும், அவற்றில் 500, 2000 ரூபாய் நோட்டுகள் தாராளமாக கிடைக்கும் என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பார்ப்போம்.












Click it and Unblock the Notifications