பெண்கள் மீது தாக்குதல்.. ஏடிஎஸ்பி பாண்டியராஜனுக்கு எதிர்ப்பு.. திருப்பூரில் மீண்டும் உண்ணாவிரதம்
பெண்கள் மீது தாக்குதல் நடத்திய ஏடிஎஸ்பி பாண்டியராஜனை பணிநீக்கம் செய்யக்கோரி திருப்பூர் சாமளாபுரத்தில் மீண்டும் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்று வருகிறது.
திருப்பூர்: பெண்கள் மீது தாக்குதல் நடத்திய ஏடிஎஸ்பி பாண்டியராஜனை பணிநீக்கம் செய்யக்கோரி திருப்பூர் சாமளாபுரத்தில் மீண்டும் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும் போலீஸின் தடியடியைக் கண்டித்து சாமளாபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் கடையடைப்பு போராட்டமும் நடைபெறுகிறது.
திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தில் உள்ள மதுக்கடையை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் நேற்று காலை 7 மணி முதல் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். நேற்று மாலை 5 மணியளவில் அங்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது சரமாரியாக தடியடி நடத்தினர்.
பெண்கள் என்றும் பாராமல் விரட்டி விரட்டி தடியால் அடித்தனர். இதில் பலர் படுகாயமடைந்தனர். மேலும் ஏடிஎஸ்பி பாண்டியராஜன் போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு பெண்ணை கையால் ஓங்கி அறைந்தார். இந்தக் காட்சிகள் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பானது.

பாண்டியராஜனை பணிநீக்கம் செய்க..
போலீசாரின் இந்த கொலை வெறித் தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்தனர். பெண்களை தாக்கிய ஏடிஎஸ்பி பாண்டியராஜனை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.

அதிகாலையில் கைது
போராட்டக்காரர்கள் மீது தடியடி தாக்குதல் நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்றிரவு திருப்பூர் சாமளாபுரத்தில் நேற்றிரவு உண்ணாவிரதம் இருந்த பொதுமக்கள் 27 பேர் இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டனர்.

மீண்டும் உண்ணா விரதம்
இந்நிலையில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இன்று மீண்டும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். கைது செய்தவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் மதுக்கடையை அகற்ற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

காவல்துறையைக் கண்டித்து கடையடைப்பு
மேலும் காவல்துறையின் தடியடி துஷ்பிரயோகத்தைக் கண்டித்து சாமளாபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் கடையடைப்பு போராட்டமும் நடைபெற்று வருகிறது. போலீசாருக்கு எதிரான மக்களின் எழுச்சிப் போராட்டத்தால் திருப்பூர் சாமளாபுரம் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications