நெல்லையில் டாஸ்மாக் கடையை மூட கோரி சாலையில் மது பாட்டில்களை அடுக்கி போராட்டம்
டாஸ்மாக் கடையை மூட கோரி பொது மக்கள் சாலையில் மது பாட்டில்களை அடுக்கி போராட்டம் நடத்தியதால் நெல்லையில் பதற்றம் உருவாகியுள்ளது.
நெல்லை: டாஸ்மாக் கடையை மூட கோரி பொது மக்கள் சாலையில் மது பாட்டில்களை அடுக்கி போராட்டம் நடத்தியதால் அங்கு பதற்றம் உருவாகியுள்ளது.
நெல்லை ஸ்ரீபுரம்-தச்சநல்லூர் பைபாஸ் ரோட்டில் ஊருடையான்குடியிருப்பு அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு புதியதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. அப்பகுதியில் மதுக்கடை அமைக்க ஏற்கெனவே அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், புதியதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு வரும் குடிமகன்கள் மது பாட்டில்களை வாங்கி கொண்டு அருகிலுள்ள வயல்களில் அமர்ந்து மது அருந்துவதாகவும், காலி பாட்டில்களை அங்கேயே வீசி விட்டு செல்வதாகவும் பொது மக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
இரவு நேரத்தில் அந்த சாலையில் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் அவர்கள் கூறி நேற்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஸ்ரீபுரம்-தச்சநல்லூர் சாலையில் லாரிகளை மறித்து மறியலில் குதித்தனர். ஏராளமானோர் திரண்டு , வரிசையாக மதுபாட்டில்களை சாலையில் அடுக்கி வைத்ததால் அங்கு திடீர் பதற்றம் உருவானது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் நெல்லை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் தலைமையிலான போலீசார் அங்கு வந்து பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதிகாரிகளிடம் மனு கொடுக்க கூறி விட்டு, சாலையில் அடுக்கிவைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்களை அவசர அவசரமாக அகற்றினர்.
பொது மக்களும் ஊர் கூட்டம் போட்டு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்பதாகக் கூறி கலைந்தனர். இந்த முடிவு அதிகாரிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications