10 நாளா தண்ணி இல்லை.. எப்படிதான் பொழப்பு ஓட்டுறது.. கும்பகோணத்தில் குடங்களுடன் ஆவேச சாலை மறியல்
Recommended Video
கும்பகோணம்: "10 நாட்களாக குடிக்க தண்ணி இல்லை.. எப்படிதான் பொழப்பு ஓட்டுறது?" என்று கும்பகோணம் அருகே கிராம மக்கள் ஆவேச மறியலில் ஈடுபட்டனர்.
சென்னையிலதான் தண்ணீர் பஞ்சம் அதிகம்னு பார்த்தால், டெல்டா மாவட்டங்களில் அதுக்கு மேலே கடும் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. அதிலும் கிராமப்புறங்களில் இந்த பிரச்சனை நிறையவே உள்ளது.
கும்பகோணம், பேராவூரணி, அதிராம்பட்டினம், பூதலூர், திருவையாறு மற்றும், நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, கொள்ளிடம், வேதாரண்யம், பொறையாறு இடங்களிலும் தண்ணீருக்கு மக்கள் குடங்களுடன் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில், கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் பகுதியில் முட்டக்குடி என்ற கிராமம் உள்ளது. இங்கு கடந்த 10 நாட்களாக தண்ணீர் இல்லையாம். கிராமத்தில் வைக்கப்பட்டுள்ள குடிநீர் மேல்நிலைதேக்க தொட்டியிலேயும் குடிநீர் இல்லையாம்.
இதுசம்பந்தமாக அதிகாரிகளிடம் எத்தனையோ முறை புகார் சொல்லியும் ஒருத்தரும் நடவடிக்கை எடுக்கவில்லை போல தெரிகிறது. எத்தனை நாளுக்குதான் இப்படியே தண்ணி இல்லாம பொழப்பு ஒட்டுறது என்று ஆவேசமாக கேட்ட கிராம மக்கள், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆடுதுறை- திருப்பனந்தாள் சாலையில் நடைபெற்ற இந்த திடீர் மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து திருப்பனந்தாள் வட்டார வளர்ச்சி அலுவலர், போலீசார் விரைந்து வந்து விரைவில், தண்ணீர் வழங்கப்படும் என உறுதி அளித்தனர்.