ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி 'யாகம்' நடத்திய அலங்காநல்லூர் மக்கள்!
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையை நீக்கக்கோரி மதுரை அலங்காநல்லூரில் பொதுமக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை: தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த அனுமதிக்கோரி அலங்காநல்லூரில் பொதுமக்கள் கோபூஜை, மற்றும் யாகசாலை நடத்துவது உள்ளிட்ட நூதன போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இன்று மாலை விளக்கு பூஜை நடத்தவும் அவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த கடந்த 2014ஆம் ஆண்டு மே மாதம் உச்சநீதிமன்றம் தடைவிதித்தது. இதுதொடர்பான வழக்க உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் தடையால் கடந்த 3 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படவில்லை. வரும் பொங்கல் திருநாளுக்காவது ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த அனுமதிக்கோரி மதுரை அலங்காநல்லூர் வாடிவாசல் அருகே பொதுமக்கள் நேற்று உண்ணாவிரத்தில் ஈடுபட்டனர்.
இரண்டாவது நாளாக இன்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவர்கள் வாடிவாசல் அருகே கோ பூஜை மற்றும் யாகசாலை பூஜை நடத்தினர். இன்று மாலை விளக்கு பூஜை நடத்த அவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.