மதுக்கடையை சூறையாடிய கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள்... மதுரையில் பெரும் பரபரப்பு!
மதுரையில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி திறக்கப்பட்ட மதுகக்கடையை பொதுமக்கள் அடித்து நொறுக்கிய சூறையாடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை: பொய்கைக்கரைப்பட்டியில் எதிர்ப்பை மீறி அமைக்கப்பட்ட மதுக்கடையை பொதுமக்கள் அடித்து நொறுக்கி சூறையாடினர். இதனால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏறபட்டுள்ளது.
மதுரை பொய்கைக்கரைப்பட்டியில் பாலிடெக்னிக் கல்லூரி அருகே பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி மதுக்கடை அமைக்கப்பட்டுள்ளது. இதனை அகற்றக்கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்
மதுக்கடையை அகற்றக்கோரி மாவட்ட நிர்வாகம் உட்பட அனைத்து அதிகாரிகளிடமும் மனு அளித்துள்ளனர். ஆனால் அதனையெல்லாம் கண்டுகொள்ளாத அரசு பொய்கைக்கரைப்பட்டியில் மதுக்கடையை திறந்துள்ளது.
மதுக்கடையை சூறையாடிய மக்கள்
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் மதுக்கடையை அடித்து நொறுக்கி சூறையாடினர். இதனை தடுக்க வந்த மதுக்கடை ஊழியர்களையும் பொதுமக்கள் சரமாரியாக தாக்கியனர்.
மறுவாழ்வு மையம் அருகிலேயே..
கல்லூரி மற்றும் மதுக்குடித்து பாதிக்கப்பட்ட மருத்துவமனைக்கு அருகிலேயே மதுக்கடை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மது அருந்தும் குடிகாரர்கள் அவ்வழியாக செல்லும் பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொள்வதாகவும் குற்றம்சாட்டிய கல்லூரி மாணவர்கள் தாங்கள் படிப்பதா அல்லது டாஸ்மாக்கை வேடிக்கை பார்ப்பதா என கேள்வி எழுப்பினர்.
மதுக்கடைக்கு சீல் வைக்கக்கோரி மறியல்
தங்களின் மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடியாக சம்பவ இடத்துக்கு வரவேண்டும் என கோரிக்கை விடுத்து அப்பகுதியில் சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர். மதுக்கடைக்கு சீல் வைக்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
போர்க்களம் போல் காட்சியளிக்கிறது
இதனால் பொய்கைக்கரைப்பட்டியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மதுக்கடை சூறை, தொடர் போராட்டம் போன்றவற்றால் அப்பகுதி முழுவதும் போர்க்களம் போல் காட்சியளிக்கிறது.
தொடரும் போராட்டங்கள்..
கடந்த வாரம் திருப்பூர் சாமளாபுரத்தில் மதுக்கடைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களை போலீசார், பெண்கள் என்றும் பாராமல் தடியடி நடத்தினர். இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் மதுக்கடைக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.