ஆளும் கட்சி அப்படியேத்தான் இருக்கும்.. எதிர்க்கட்சிதான் எங்கள் குறி! தமிழக மக்களின் 'பல்ஸ்'
சென்னை: ஒவ்வொரு தேர்தலிலும் ஆளும் கட்சி தூக்கி எறியப்பட்டு, எதிர்க்கட்சி அரியணை ஏறுவதுதான் வழக்கம். ஆனால், தமிழகத்தில் இப்போது நடந்துள்ள தேர்தலில்தான் எதிர்க்கட்சி துடைத்து வீசப்பட்டு, ஆளும் கட்சி பாதுகாப்பாக அரசாள அனுமதிக்கப்பட்டுள்ள விந்தை நிகழ்ந்துள்ளது.
எப்படித்தான் ஆட்சி நடத்தினாலும், ஐந்தாண்டு முடியும் போது மக்களுக்கு அந்த ஆட்சி மீது அதிருப்தி ஏற்படத்தான் செய்யும். அதிருப்தி பெரிதாக இல்லாவிட்டாலும்கூட, எதிர்க்கட்சிக்கு வாய்ப்பு தரலாமே, அவர்கள் இன்னும் கூடுதல் சலுகையை நமக்கு தருவார்களே என்ற எண்ணம்தான் மக்களிடம் மேல் எழும்.
பிற மாநிலங்களைவிட தமிழகத்தில் இந்த டிரெண்டுதான் 3 தசாப்தங்களாக தொடர்ந்து வந்தது. இம்முறை அது அப்படியே உல்டாவாக நடந்துள்ளது.

விரட்டியடிப்பு
எதிர்க்கட்சி அந்தஸ்தில் இருந்த தேமுதிகவுக்கு ஒரு சீட்டையும் தராமல் விரட்டியடித்துள்ள மக்கள், ஆளும் கட்சியை மீண்டும் அரியணையில் அமர்த்தி அழகு பார்த்துள்ளனர்.

எதிர்க்கட்சி மீது கோபம்
லாஜிக் படி பார்த்தால், மக்களுக்கு ஆளும் கட்சியைவிட எதிர்க்கட்சி மீதுதான் அடங்காத கோபம் இருந்துள்ளது, என்பதுதான் தேர்தல் ரிசல்ட் சொல்லும் பாடம்.

டெபாசிட் போச்சே
போட்டியிட்ட 104 தொகுதிகளில் 103ல் டெபாசிட்டை இழந்துள்ளது தேமுதிக., அதன் தலைவர் விஜயகாந்த்தும் டெபாசிட் இழந்தவர் என்பதுதான் இதில் ஸ்பெஷல். மாறாக, 234 தொகுதிகளில் போட்டியிட்டு 134 தொகுதிகளை வென்றுள்ளது ஆளும் கட்சியான அதிமுக.

விஜயகாந்த் மீது குறி
மக்களுக்கு விஜயகாந்த் மீது ஏன் இந்த ஆக்ரோஷம் என்று மூத்த பத்திரிகையாளர்கள் மற்றும் அரசியல் பார்வையாளர்கள் சிலரிடம் கேட்டோம். அவர்கள் கூறியதாவது: கடந்த ஆட்சியில் தேமுதிக எதிர்க்கட்சியாக செயல்பட்டது என்பதை விஜயகாந்த்தே ஒப்புக்கொள்ள மாட்டார்.

கட்சி நடத்தவில்லை
தங்கள் கட்சியை சேர்ந்த 8 எம்.எல்.ஏக்களே ஆளும் கட்சிக்கும் தாவும் நிலையில்தான் கட்சி நடத்தினார் விஜயகாந்த். கடைசியாக எதிர்க்கட்சி அந்தஸ்தும் பறிபோனது.

வருவதேயில்லை
சட்டசபைக்குள் நாக்கை துருத்துவதுதான் எதிர்க்கட்சி தலைவர் செய்யும் வேலை என்று நினைத்த விஜயகாந்த், அச்செயலுக்காக விதிக்கப்பட்ட, சஸ்பெண்ட் தண்டனைக்கு பிறகு, சட்டசபைக்கு வருவதையும் தவிர்த்துவிட்டார். 23 எம்.எல்.ஏக்களை வைத்திருந்த திமுக சட்டசபை குழு தலைவர் ஸ்டாலின்தான் ஒழுங்காக சபைக்கு வந்து கொண்டிருந்தார்.

தொகுதி பற்றிகூட பேசவில்லை
தனது தொகுதி பிரச்சினை குறித்து கூட சட்டசபையில் ஒரு வார்த்தையும் பேசாததால்தான், விஜயகாந்த், உளுந்தூர்பேட்டைக்கு ஓடிப்போய் போட்டியிட வேண்டியதாயிற்று. நிலைமை இப்படி இருக்க, இவர் தமிழக பிரச்சினைகள் பற்றி எப்படி பேசுவார்?

பேப்பரே பார்க்கலை
மலேசியாவில் இருந்து சென்னை திரும்பிய விஜயகாந்த், தமிழக அரசியல் குறித்தே தனக்கு எதுவும் தெரியாது என்றும், செய்தித்தாளே படிப்பதில்லை என்றும் கூறிய பேட்டியை மக்கள் எப்படி எளிதாக மறந்திருப்பார்கள். செயல்படாத முதல்வரை மக்கள் பார்த்திருப்பார்கள். ஆனால், செயல்படாத எதிர்க்கட்சித் தலைவர் என்ற பெயர் வாங்கிய முதல் ஆள் விஜய்காந்த் தான்.

விவரம் இல்லை
விவரமே தெரியாத ஒருவர் எதிர்க்கட்சி தலைவராக இருப்பதற்கு பதிலாக, வெறுமனே அறிவிப்பு வெளியிட்டாலும், விவரம் தெரிந்த ஆளும் கட்சி பரவாயில்லை என்பதுதான் மக்களின் எண்ணமாக இருந்தது. சட்டசபையில் எந்த கேள்வியும் கேட்காத உறுப்பினர் பட்டியலில் விஜயகாந்த் பெயரை பார்த்து ஓட்டு போட்ட மக்கள் நொந்துபோய் இருந்தனர்.

எதிர்க்கட்சிக்காக தேர்தல்
2016ல் நடைபெற்றது ஆளும் கட்சியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இல்லை. சிறந்த எதிர்க்கட்சியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் என்பதுதான் மக்களின் எண்ணமாக இருந்துள்ளது. கடந்த கால ஆட்சி முறையால், திமுக மீது கோபம் முழுமையாக குறையவில்லை என்பதால், அவர்களுக்கு அதிக உறுப்பினர்களுடன் கூடிய எதிர்க்கட்சி அந்தஸ்தை மட்டும் மக்கள் கொடுத்துள்ளனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications