விஜயகாந்த் கல்லூரி மைதானத்தில் ஏப்ரல் 10ல் ம.ந.கூ-தேமுதிக கூட்டணி மாநாடு! வைகோ அறிவிப்பு
சென்னை: சென்னை அடுத்த மாமண்டூரில் உள்ள விஜயகாந்த் குடும்பம் நிர்வகிக்கும் ஆண்டாள்-அழகர் பொறியியல் கல்லூரி வளாகத்தில், வரும் 10ம் தேதி தேமுதிக-மக்கள் நல கூட்டணியின் அரசியல் மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டின்போது, கூட்டணி சார்பாக போட்டியிட உள்ள வேட்பாளர்களின் முதல் பட்டியலை வெளியிட உள்ளோம் என்று மக்கள் நல கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ தெரிவித்தார்.
விஜயகாந்த்தின் தேமுதிக கட்சி, மக்கள் நல கூட்டணியுடன் கூட்டணி அமைத்து சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறது.
விஜயகாந்த் கட்சிக்கு 124 தொகுதிகளும், மக்கள் நல கூட்டணிக்கு 110 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்து, ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டது.
இதனிடையே, விஜயகாந்த்தை, அவரது கோயம்பேடு அலுவலகத்தில் வைத்து, மக்கள் நல கூட்டணியிலுள்ள தலைவர்கள் வைகோ, திருமாவளவன், முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு நிருபர்களிடம் வைகோ அளித்த பேட்டி: சென்னையை அடுத்த மாமண்டூரில் உள்ள ஆண்டாள்-அழகர் கல்லூரி மைதானத்தில், ஏப்ரல் 10ம் தேதி, மக்கள் நல கூட்டணி-தேமுதிக இணைந்து மாநாடு நடத்த முடிவு செய்துள்ளோம்.
மாமண்டூரில் நடைபெறும் மாநாட்டின்போது, கூட்டணி சார்பாக போட்டியிட உள்ள வேட்பாளர்களின் முதல் பட்டியலை வெளியிட உள்ளோம்.
காவிரியின் குறுக்கே கர்நாடகா அணை கட்டுவதை எதிர்த்து வரும் 5ம் தேதி தமிழக விவசாயிகள் நடத்த உள்ள போராட்த்திற்கு மக்கள் நல கூட்டணி தனது ஆதரவை அளிக்கும்.
ஜெயலலிதாவை பொறுத்தளவில், அணை கட்டு விவகாரத்தை கண்டுகொள்ளவில்லை. சொத்துக்குவிப்பு வழக்கில் கவனம் செலுத்துகிறார்.
தேமுதிக நிர்வாகிகள் இழுக்கும் வேலையில் திமுக ஈடுபட்டு வருகிறது. இது திமுகவின் பயத்தை காட்டுகிறது. இவ்வாறு வைகோ தெரிவித்தார்.
மாநாடு நடைபெற உள்ள கல்லூரி விஜயகாந்த் குடும்பத்தாரால் நிர்வகிக்கப்படுவதாக கூறப்படுகிறது, மேலும், விஜயகாந்த்தை அவரது அலுவலகத்திற்கு சென்றுதான் ம.ந.கூட்டணியினர் சந்தித்தனர். விஜயகாந்த் இன்னும் கூட்டணி கட்சியினர் அலுவலகங்களுக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.