பெரம்பலூரில் காற்றுடன் பெய்த மழை... வாழை, பாக்குமரங்கள் சேதம்
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ததால் அப்பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள வாழை மரங்கள், பாக்கு மரங்கள் உள்ளிட்டவைகள் சாய்ந்து சேதமடைந்துள்ளன. குச்சுவள்ளி கிழங்கு, மக்காச்சோளம், பயிர்களும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
வடகிழக்குப் பருவமழை தமிழகம் முழுவதும் கொட்டி வருகிறது. காணும் இடமெங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக பரவலாக மழை பெய்த காரணத்தால்,மலையாலப்பட்டி கிராமத்தை சேர்ந்த ராமசாமி என்பவரின் விவசாய நிலத்தில் 800க்கும் மேற்பட்ட பாக்கு மரங்களும்,1500க்கும் வாழை மரங்களும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ததால் மரங்கள் சேதமடைந்தன.
பெரம்பலூர் அருகே மலையாலப்பட்டி, பூலாம்பாடி, அரும்பாவூர் உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் விவசாயிகள் குச்சுவள்ளி கிழங்கு, மக்காச்சோளம், வாழைமரம், பாக்குமரம், போன்ற மரங்கள் மற்றும் தானியங்கள் பயிரிட்டுள்ளனர். இவை அனைத்தும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
காற்றுடன் பெய்த கனமழையால் மூன்று நாட்களுக்கு மேலாக மின் கம்பங்கள் பளுதடைந்துள்ளதால் மின் வசதிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.எனவே மின் வசதிகளை விரைந்து சரிசெய்வதோடு,சேதமடைந்த விவசாய பயிர்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டுமென கோரிக்கைவிடுத்துள்ளனர்.