பேரறிவாளனின் தந்தை குயில்தாசனுக்கு உடல்நலக்குறைவு.. சென்னை மருத்துவமனையில் அனுமதி
பேரறிவாளனின் தந்தை குயில்தாசன் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்து பரோலில் வந்த பேரறிவானின் தந்தை குயில்தாசன் உடல்நலக் குறைபாடு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 1991-ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூருக்கு தேர்தல் பிரசாரத்துக்கு வந்த பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயகுமார், ரவிசந்திரன் ஆகிய 7 பேரும் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

26 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை பெற்று வரும் நிலையில் பேரறிவாளனின் தந்தைக்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டுள்ளதால் அவரை பரோலில் விடுவிக்க வேண்டும் என்று தாயார் அற்புதம்மாள் கோரிக்கை விடுத்தார்.
அதன்பேரில் கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி ஒரு மாத பரோலில் விடுவிக்கப்பட்டார். அவரது பரோல் கடந்த செப்.24-இல் முடிவடைந்த நிலையில் தந்தைக்கு மேலும் இரு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டியிருப்பதால் அவரது பரோல் காலத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்க வேண்டும் என்று அற்புதம்மாள் கோரிக்கை விடுத்திருந்தார்.
அதன்பேரில் அவரது பரோல் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரது தந்தை குயில்தாசனுக்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டுள்ளதால் அவர் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications