பேரறிவாளன் பரோலை மேலும் நீட்டிக்க வேண்டும்... அரசிடம் அற்புதம்மாள் மனு!
பேரறிவாளனின் பரோலை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று முதல்வர் பழனிசாமிக்கு அற்புதம்மாள் மனு அளித்துள்ளார்.
சென்னை : பரோலில் வந்துள்ள தனது மகனின் விடுப்பை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க வேண்டும் என்று அற்புதம்மாள் அரசுக்கு கோரிக்கை கடிதம் அளித்துள்ளார்.
ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் 26 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி ஒரு மாத பரோல் அளித்தது தமிழக அரசு. தொடர்ந்து மகனின் பரோலுக்காக போராடி வந்த அற்புதம்மாளுக்கு அரசின் திடீர் அறிவிப்பு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

எனினும் நிரந்தரமாக விடுதலையளிக்க வேண்டும் என்று முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்த போதே அற்புதம்மாள் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பேரறிவாளனின் பரோல் முடியும் நிலையில் அவரின் பரோலை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்க வேண்டும் என்று சட்டத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர் உள்ளிட்டோருக்கு கோரிக்கை கடிதம் அளித்துள்ளார்.
வீட்டை விட்டு பேரறிவாளன் வெளியே செல்லக் கூடாது என்ற நிபந்தனையின் காரணமாக தொடர்ந்து வீட்டில் இருந்தே அவருக்கு ரத்த மாதிரி சோதனை மற்றும் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. பேரறிவாளன் பரோலில் வந்தது முதல் என்னுடைய கணவரும் மருத்துவ சிகிச்சைக்கு நல்ல ஒத்துழைப்பை அளித்து வருகிறார்.
சிகிச்சைக்கு மறுப்பு தெரிவிக்காமல் இருக்கும் அவரின் உடல்நிலையை மேலும் சரி செய்ய தொடர் சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது. இந்த சிகிச்சையின் போது மகன் பேரறிவாளன் உடன் இருக்க வேண்டும் என்று என் கணவர் விரும்புகிறார். எனவே இதனை கருத்தில் கொண்டு பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க வேண்டும் என்றும் அற்புதம்மாள் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் ரத்த மாதிரி சோதனை, தனது கணவரின் மருத்துவ அறிக்கைகள் உள்ளிட்டவற்றையும் இத்துடன் இணைத்து அற்புதம்மாள் வழங்கியுள்ளார். எங்கள் குடும்பத்தில் இருக்கும் அனைவரின் உடல்நலனை கருத்தில் கொண்டு பேரறிவாளனின் பரோலை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்க வேண்டும் என்று அற்புதம்மாள் கோரிக்கை விடுத்துள்ளார். பேரறிவாளனின் பரோல் செப்டம்பர்24ம் தேதியுடன் முடிவடைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications