பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை குறித்து 10 நாட்களுக்குள் ஜெ. முடிவெடுப்பார்: அற்புதம்மாள்
ஈரோடு: ராஜிவ் வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உட்பட 7 தமிழரை விடுதலை செய்வது குறித்து 10 நாட்களுக்குள் முதல்வர் ஜெயலலிதா முடிவெடுப்பார் என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
கடந்த 25 ஆண்டுகளாக எனது மகன் பேரறிவாளன் செய்யாத குற்றத்திற்கு தண்டனை அனுபவித்து வருகிறார். அவரிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள், வாக்குமூலம் பெற்றவர்கள் பேரறிவாளனை விடுதலை செய்யலாம் என்று கூறினார்கள். ஆனால் விடுதலை என்பது எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ராஜிவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று சட்டசபையில் முதலமைச்சர் ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றினார். ஆனால் அப்போதைய மத்திய அரசாக செயல்பட்ட காங்கிரஸ் கட்சி 7 பேரின் விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றம் போனது.
7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினரும் வலியுறுத்தி வருகிறார்கள். மாணவ-மாணவிகள் உள்பட பல்வேறு அமைப்பினர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். இருந்தாலும் அவர்கள் விடுதலை செய்யப்படாதது வேதனை அளிக்கிறது.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா என்னை நேரில் அழைத்து ஒரு சகோதரிபோல் ஆறுதல் கூறினார். அப்போது பேரறிவாளன் விடுதலையாகுவதற்கு நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதியாக கூறினார்.
எனது மகன் பேரறிவாளனை விடுதலை செய்ய முதலமைச்சர் ஜெயலலிதா 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுப்பார் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது. 7 பேரின் விடுதலைக்கு நடவடிக்கை எடுத்த பிறகுதான் அவர் தேர்தலை சந்திப்பார் என்று கருதுகிறேன்.
இவ்வாறு அற்புதம்மாள் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications