பேரறிவாளனுக்கு வேலூர் மருத்துவமனையில் சிறுநீரக நோய் தொற்று சிகிச்சை
வேலூர்: முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு, வேலூர் மருத்துவமனையில் இன்று சிறுநீரக நோய் தொற்று சிகிச்சை அளிக்கப்பட்டது
முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் வேலூர் ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் சிறுநீர் தொற்று, முதுகுவலி, வயிறு பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்தார்.

வேலூர் அரசு மருத்துவமனையில் சிறுநீர் தொற்று பிரச்சினைக்கு சிகிச்சை அளிக்க போதிய வசதிகள் இல்லாததால், அவருக்கு சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் சிறைத்துறை டிஐஜியிடம் மனு அளித்தார்.
இதையடுத்து சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். பின்னர் ராஜிவ்காந்தி பொது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கான மருந்துகளை பேரறிவாளன் சாப்பிட்டு வருகிறார். இந்த நிலையில் மீண்டும் இன்று பாதிப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து வேலூர் டி.எஸ்.பி. பன்னீர் செல்வம் இன்ஸ்பெக்டர் திருமால் மற்றும் போலீசார் சிறையில் இருந்து பேரறிவாளனை அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு பாதுகாப்புடன் அழைத்து சென்றனர். அங்கு சிறுநீரகப் பிரிவு, எலும்பு தேய்மான பிரிவு ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டு பேரறிவாளனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
உடல் நலக்குறைவாக இருக்கும் தனது தந்தையை பார்க்க பரோல் கேட்டு பேரறிவாளன் மனு கொடுத்துள்ளார். விரைவில் பரோல் கிடைக்கும் என்ற எதிர் பார்ப்பில் இருப்பதாக அவரை சந்தித்தவர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications