இந்தி திணிப்பு, பெரியார்: ‘ஆரியமாலா’ நிர்மலா சீதாராமன்... சரமாரியாக விளாசிய திமுக முரசொலி!
சென்னை: இந்தி மொழி திணிப்பு விவகாரத்தில் தந்தை பெரியார் மற்றும் திமுகவை விமர்சித்து நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை 'ஆரியமாலா’ 'வித்துவாமிசினி’ என்கிற புனைபெயர் சூட்டி கடுமையாக விமர்சித்துள்ளது திமுகவின் முரசொலி நாளேடு.
திமுகவின் முரசொலி நாளேட்டில் முதுபெரும் திராவிடர் இயக்க எழுத்தாளர் க.திருநாவுக்கரசு எழுதிய கட்டுரை:
'தமிழர்களை அநாகரிகமானவர்கள்’ என்று கடந்த 10 ஆம் தேதி மக்களவையில் மத்திய அரசின் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேச்சினூடே குறிப்பிட்டார். உடனே தனது போர்க்குரலை உயர்த்தி எதிர்ப்பை வெளிப்படுத்தினார் கனிமொழி கருணாநிதி. இதனால் நாடாளுமன்றத்தில் 100 முறை வேண்டுமானாலும் மன்னிப்புக் கோருகிறேன் எனப் பேசினார் பிரதான். இந்த விவகாரத்தில் 'வித்துவாமிசினி’ 'ஆரியமாலா’ நிர்மலா சீதாராமனால் சும்மா இருக்கமுடியுமா? திருவாய் மொழியைப் பொழிந்தார்.

பெரியாரைத் தாக்கி பேசிய நிர்மலா சீதாராமன்
மக்களவையில் பெரியாரைத் தாக்கிப் பேசினார். அவர் பேசியதாகச் சில மேற்கோளை எடுத்து காட்டி இருக்கிறார். அவற்றையெல்லாம் வரிசைப் படுத்தி மீண்டும் நாம் இங்கே சொல்லவிரும்பவில்லை. கட்டுரையின் வேறு இடத்தில் சொல்வோம். 'ஆரியமாலா’ நிர்மலாவின் நோக்கம் பெரியார் தமிழை–தமிழரைக் காட்டுமிராண்டிகள் என்று சொல்லி இருக்கிறார். அதைப் போல தர்மேந்திர பிரதான் தமிழர்களை 'நாகரிகமற்றவர்கள்’ என்று கூறுகிறார். பெரியாரை வழிபடுகிறீர்கள். பிரதானை எதிர்க்கிறீர்கள் என்பது ஆரியமாலாவின் கருத்து; வாதம்.
வேறுபாடு தெரியாதா?
பெரியார் தமிழர்களை கூறியதன் நோக்கம், என்ன? தர்மேந்திர பிரதான் ஆதிக்க வசப்பட்டு கோபத்தோடு சொல்வதன் நோக்கம் என்ன? இரண்டுக்கும் வேறுபாடு இருக்கிறது. பெரியார் கூறியதன் நோக்கம் தமிழர்களை உலக மாந்தர்களாக ஆக்க வேண்டும். அறிவுள்ளவர்களாக தன்மானம் உள்ளவர்களாக மாற்ற வேண்டும். தமிழ்மொழி அதற்கு ஏற்றதாக இருக்க வேண்டும். தமிழும் தமிழர்களும் அதற்கேற்ப வளர வேண்டும் என்று கருதித்தான் சொன்னார்.
ஆணவத்தோடு பேசிய பிரதான்
பிரதான் எதற்காகச் சொல்கிறார்? புதிய தேசியகல்விக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பதற்காக மன்னர் கால ஆணவத்தோடு தனக்கு அடங்கிய 'இராஜ்ய பிரதிநிதிகளை’ப் பார்த்து 'அநாகரிகமானவர்கள்’ என்று சொல்கிறார். இது இரண்டும் எப்படி ஒன்றாகும்?
ஆரியமாலா நிர்மலா சீதாராமன்
இது 'வித்வாமிசினி’ 'ஆரியமாலா’ நிர்மலா சீதாராமனுக்குத் தெரியாதா? தெரியும். பிரதான் மாட்டிக் கொண்டார். அவையிலேயே பேச்சைத் திரும்பப் பெற்றுக் கொண்டார். மன்னிப்பையும் கோரினார். இந்தியாவை ஆரிய வர்த்தமாக்க முனைய வந்தவருக்கு துணை நிற்கும் 'ஆரியமாலா’ நிர்மலா சீதாராமன் பெரியாரின் தமிழ், தமிழர் பற்றிய கருத்துகளை எடுத்து வைத்து குழப்பம் செய்கிறார். அதற்கு 1967 ஆம் ஆண்டு இந்து ஆங்கில இதழைச் சான்று காட்டுகிறார்.
வரலாறுதான் என்ன?
அதில் தெ.பொ.மீ.யின் எதிர்ப்பைச் சொல்லுகிறார். தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் திராவிட இயக்க எதிர்ப்பு மாநாட்டை நடத்தியவர். அவர் பெரியாரை ஆதரிப்பவரா? திராவிடஇயக்க எதிர்ப்பாளர் ஆயிற்றே. அவர் பெரியாரின் கருத்தை எதிர்க்காமல் எப்படி இருப்பார்? தனி நாயகம் அடிகள் பெரியாரின் கருத்தைச் சொந்தக் கருத்து என்று சொல்கிறாரே தவிர அந்தக் கருத்துப் பற்றி ஆய்வுரை செய்து எந்த மதிப்பீட்டையும் வழங்கவில்லை.
அறிஞர் அண்ணாவின் கருத்தாகச் சொல்லப்பட்டு உள்ளதில் பெரியாரின் உள்ளீடு தெரிகிறது. அவ்வளவே. நிர்மலாவின் சான்று நிற்கவில்லையே. பெரியார் சுதந்திரச் சிந்தனையாளர். அவர் என்ன?– கத்துக்குட்டி அண்ணாமலையா? அவர் ஏற்றுக் கொண்ட கொள்கைகளுக்காக உண்மையாக இருந்தவர். உழைத்தவர்.
நிர்மலாக்களின் தாத்தாக்களை சந்தித்தவர்
நிர்மலாக்களின் தாத்தாக்களைச் சந்தித்தவர். பெரியாரைப் பற்றி மோடி பேசவில்லை. அமித்ஷா பேசவில்லை. தென்னகத்தில் பிறந்த 'ஆரியமாலா’ பேசுகிறார். ஆரிய மறைகளுக்கு உரை பிறந்த இடம் தென்னகம்! சாயணர் உரை வரைந்தார். அந்த நீட்சிதானே நிர்மலா சீதாராமன்!
ஆகவே நிர்மலா எடுத்துக் கொடுத்து காப்பாற்ற முன் வருகிறார். பெரியாரின் கருத்தை மேலோட்டமாகப் பார்த்தால் தமிழ், தமிழர்கள் எதிர்ப்பை அவர் வெளிப்படுத்துவது போல்தான் தோன்றும். ஆனால் அது அத்தகையது அல்ல என்று கனிமொழி 'ஆரியமாலா’ நிர்மலாவுக்கு பதில் அளித்து இருக்கிறார்.
திராவிடத்தின் நீலகேசி கனிமொழி
கனிமொழி கருணாநிதி திராவிட இயக்கத்தின் நீலகேசி. மிக அழகாக பதில் சொல்லி இருக்கிறார். ஒரு சூத்திரத்தைப் போல்– நூற்பாவைப் போல் பதில் சொல்லி இருக்கிறார். அவர் கூறிய பதிலில் பெரியாரின் உள்ளொளித் தெரிகிறது. அது வருமாறு:–
“பெரியார் எதற்காகச் சொன்னார் என்பதை அம்மையார் நிர்மலா சிதாராமன் புரிந்து கொள்ள வேண்டும். அறிவியல் விஷயங்கள் உலகம் முழுவதும் பரவும் புதிய விஷயங்கள் தமிழக மாணவர்களுக்கு வந்து சேர வேண்டும் என்பதற்காக பழம் பெருமை பேசிக் கொண்டு இருக்காதீர்கள். புதிய விஷயங்களைக் கொண்டு வாருங்கள் என்ற ரீதியில் பெரியார் பேசி இருக்கிறார். இதனை நிர்மலா சீதாராமன் புரிந்து கொள்ளவில்லை.
“அவர் புரிந்து கொள்ளக்கூடிய மொழியில் சொல்ல வேண்டுமானால். 'மெல்லத் தமிழினி சாகும் என்று ஒரு பேதை உரைத்தான்’ என பாரதியார் கூறியது போன்ற அக்கறையை பெரியார் வெளிப்படுத்தினார்.
நிர்மலாவுக்கு புரிதல் வேண்டும்
தந்தை பெரியார் பேசுவதற்கும் இன்னொரு மாநிலத்திலே இருக்கக் கூடிய ஓர் அமைச்சர் தமிழர்களைப் பார்த்து பேசுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.அவமானப் படுத்துவதற்கும் அக்கறை கொள்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது.”
பெரியாரின் சிந்தனை பாதிப்புக்கு ஆளானவர் களும் பாதிக்கப்பட்டவர்களும் சூத்திர, அவர்ணஸ்தர்களும் கேட்கிறபோதே, படிக்கிறபோதே கிளர்ச்சிக்குரியவர்களாக ஆகியிருக்கிறார்களே, அது ஏன்?
தந்தை பெரியார் யார் தெரியுமா?
மதத்தால்,மொழியால் ஒரு பழம் பெரும் இனம் சிக்குண்டு இருப்பதை அடையாளம் கண்டு தட்டி எழுப்பி'நெருப்பினில் தமிழ் செய்து நீசர் முன் வைத்தவர்’பெரியார். பெரியார் தமிழர்களுக்காகச் சொன்னதை எடுத்து வைத்துக் கொண்டு நிர்மலாக்கள் ஏன் கொதிக்க வேண்டும்? புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பெரியார் பேச்சை எழுத்தை முதன் முதலாக கேட்டும் படித்தும் உணர்ந்த போது அதிர்ந்து போனார்.'எம்பெருமான் இமயமலையையே இல்லை என்கிறாரே’என்று வியந்து இருக்கிறார். இதுவரை நாம் கேட்ட மலைப்போன்ற கருத்துகளை மறுக்கிறாரே என்கிறார்.
ஆரியமாலா நிர்மலா சீதாராமன் அறிவாரா?
அறிஞர் அண்ணா அவர் பேச்சைக் கேட்டபோது 'திகைக்க வைக்கிறாரே’, 'திடுக்கிட வைக்கிறாரே’ என்று பேசினார். கல்லூரி காணாத அந்தக் கிழவரை தலைவராக நான் கண்டதும் கொண்டதும் அவர் ஒருவரைத்தான் என்று கூறினார்.
சூத்திரனாய், அவர்ணஸ்தர்களாய் ஆக்கப்பட்டவர் களுக்குத்தான் அந்த வலித் தெரியும். 'வித்துவாமிசினி’ 'ஆரியமாலா’ நிர்மலா சீதாராமனுக்கு எப்படித்தெரியும்.? 'ஆரியமாலா’ நிர்மலாவின் பார்வைக்கு பெரியார் தமிழைப் பற்றிக் கூறிய அவரின் ஒரு சில கூற்றைப் பாருங்கள்.
பெரியாரும் தமிழும்
(1) நான் தமிழை எதற்காகக் குறை கூறுகிறேன் என்றால் அது மனிதன் காட்டுமிராண்டியாக இருந்த காலத்தில் ஏற்பட்ட மொழி. படிப்பறிவு இல்லாதவர்களால் ஏற்படுத்தபபட்ட மொழி. மனிதன் பண்படாமல் இருந்தபோது ஏற்பாடு செய்து கொண்ட மொழி என்பதோடு நம் வளர்சிக்கும் அதில் வழியில்லை;விஞ்ஞான முன்னேற்றத்திற்கு அதனால் பயனில்லை. மற்ற மொழிகளிலிருந்து மொழி பெயர்த்து அதன் மூலம் நாம் முன்னேறினால்தான் உண்டு என்கிற நிலையில் தமிழ் மொழி இருப்பதனாலேயே ஆகும்.” (விடுதலை 03.05.1971 )
(2) தமிழில் ஆரியம் புகுந்ததால்தான் காட்டு மிராண்டித் தனம் புகுந்துவிட்டது. இதில் பண்டிதர்கள் கவனம்செலுத்த வேண்டாமா? கவலை எடுத்துக் கொள்ள வேண்டாமா? வெளிநாட்டு மக்கள் எல்லாம் காட்டுமிரண்டிகளாக வாழ்ந்த காலத்தில் கப்பலோட்டி கடல் கடந்து வாணிபம் நடத்திய தமிழர்களின் மரபில் இன்று ஒரு நியூட்டன் தோன்றவில்லை. ஒரு எடிசன் தோன்றவில்லை. ஒரு மார்கோணி தோன்ற முடியவில்லையே என்பதை அறிந்து கொள்ள வேண்டாமா?” – விடுதலை (05.01.1968)
(3) “ஆங்கிலம் வளர்ந்த மொழி; விஞ்ஞான மொழி என்பதும் தமிழ் வளர்ச்சி அடையா பழங்கால மொழி என்பதும் என்னுடைய மதிப்பீடு ஆகும். இதை நான் சொன்னதற்கான முக்கிய நோக்கம் தமிழ்மொழி ஆங்கில மொழி அளவுக்கு விஞ்ஞான மொழியாகவும் பகுத்தறிவு மொழியாகவும் ஆகவில்லை என்பதுதானே தவிர தமிழ் மீது எனக்குத் தனிவெறுப்பு இல்லை.”
பாவேந்தர் கவிதை
பெரியாரின் கருத்தை புரட்சிக் கவிஞரின் கவிதையில் மொழியின் பழமையைக் கீழ்க்காணும் கவிதை வரிகளில் காணுகின்றோம்.
“திங்களொடும் செழும்பரிதி
தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும்
மங்குல் கடல் இவற்றோடும்
பிறந்த தமிழுடன் பிறந்தோம்”
இந்தக் கவிதையின் பொருளை பெரியார் தமது மொழியில் சொல்கிறார்.
பெரியாரின் விமர்சன பார்வை ஏன்?
இப்படிப்பட்ட கருத்துகளைப் பெரியார் சொன்னதற்குக் காரணம் அம் மொழிக்குரியவர்கள் அனைத்துத் துறையிலும் முன்னேற மொழி அனைத்து கலைகளையும் பெற்று உயரவேண்டும் என்பதே ஆகும். அறிஞர் அண்ணா பெரியாரின் இத்தகைய விமர்சனங்களை 'பூனை தன் குட்டியைக் கவ்விக்கொண்டு செல்வது போல’ என்று குறிப்பிடுவார்.
தர்மேந்திர பிரதான் குறிப்பிட்ட அநாகரிகம் அத்தகைய தன்மையுடையது அல்ல. அதற்குச் சப்பைக் கட்டுக்கட்டும் 'வித்துவாமிசினி’ நிர்மலா சீதாராமன் பெரியார் கருத்தை வேறுவித விளக்கம் கூறி குழப்பதை விதைக்கிறார்.
பிரதானின் நோக்கமே வேறு
பிரதான் கூறியதுவேறு நோக்கமுடையது. பெரியார் கூறியது மொழி, இனம், நாடு முன்னேறும் நோக்கம் கொண்டது. ஆகவேதான் திராவிட இயக்கத்தின் நீலகேசியான கனிமொழி கருணாநிதி'அவமானப்படுத்தியதற்கும் அக்கறை கொள்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது’என்று நறுக்குத் தெறித்தது போல் கூறி இருக்கிறார். ஆகவே இந்தச் சர்ச்சைகளின் மூலம்; கனிமொழி அறிவுக்கொடியை உயர்த்தினார். நிர்மலா சீதாராமன் அறியாமையை வெளிப்படுத்தினார்.
பா.ஜ.க.நாடு தழுவி திராவிட இயக்கத்தோடு ஒரு கருத்தியல் போர் நடத்திவருகிறது. எதிர் கொள்வோம்; முன்னேறுவோம். இவ்வாறு திமுகவின் முரசொலி நாளேட்டில் எழுதப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications