தூத்துக்குடி திமுகவின் கை உடைந்தது.. பெரியசாமி மறைவால் சோகத்தில் தொண்டர்கள்!
தூத்துக்குடி: தூத்துக்குடி திமுகவை கடந்த 40 வருடங்களாக தனது முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் என்.பெரியசாமி. அவரது மறைவால் தூத்துக்குடி திமுகவின் அடையாளம் இன்று அழிந்துள்ளது. திமுகவின் எதிர்காலம் குறித்த கவலையில் தொண்டர்கள் ஆழ்ந்துள்ளனர்.
வீரபாண்டி ஆறுமுகம் இருந்தவரை சேலம் திமுக எப்படி ராஜா போல கம்பீரமாக வலம் வந்ததோ அதேபோலத்தான் என்.பெரியசாமி தலைமையில் தூத்துக்குடி திமுக வீறு நடை போட்டுக் கொண்டிருந்தது. என்னதான் பெரியசாமி மீது உள்ளூர் திமுக நிர்வாகிகள் அதிருப்தியாக இருந்தாலும் கூட பெரியசாமி அளவுக்கு திமுகவை அங்கு கட்டுப்படுத்த, வழி நடத்த ஆள் இல்லை என்பதே நிலவரம்.
இந்த ஒரு காரணத்திற்காகவே பெரியசாமி தொடர்ந்து அசைக்க முடியாத நபராக இருந்து வந்தார். எத்தனை அதிருப்திகள் வெடித்தாலும் கூட பெரியசாமி.. "பெரிய்யய" சாமியாக வலம் வந்தார். காரணம், அவர் கருணாநிதியின் முரட்டு பக்தராக இருந்ததே.
தீவிர பக்தர்
பெரியசாமி முரட்டு பக்தர் என்றுதான் கருணாநிதி அழைப்பார். அந்த அளவுக்கு கருணாநிதி மீது பற்றும் பாசமும், விசுவாசமும் கொண்டிருந்தவர் பெரியசாமி. தூத்துக்குடி திமுகவின் ராஜாவாக வலம் வந்தவர்.
மகளை களத்தில் இறக்கி
தன்னோடு சேர்த்து தனது மகள் கீதா ஜீவனையும் தூத்துக்குடி திமுகவின் முக்கியப் புள்ளியாக மாற்றி வைத்திருந்தவர். மகளுக்கு அமைச்சர் பதவி வாங்கிக் கொடுத்தவர். மொத்தத்தில் தூத்துக்குடி திமுக என்றால் அது பெரியசாமிதான். அப்படி ஒரு அசைக்க முடியாத மனிதராக வலம் வந்தார் பெரியசாமி.
எதிர்ப்பை விரும்பாதவர்
எதிர்க்கட்சிகள் மத்தியில் மட்டுமல்லாமல் தனது கட்சியிலும் கூட எதிர்ப்பை விரும்பாதவர் பெரியசாமி. இதனால்தான் அனிதா ராதாகிருஷ்ணன், ஜோயல் போன்றோரெல்லாம் பெரிய அளவில் தலையெடுக்க முடியாமல் முடங்கிப் போயுள்ளனர். அந்த அளவுக்கு கட்சி மேலிடத்தில் அசைக்க முடியாத செல்வாக்குடன் வலம் வந்தார்.
சசிகலா புஷ்பாவை விரும்பாதவர்
சசிகலா புஷ்பா திமுகவில் சேர விருப்பம் தெரிவித்தார் என்று முன்பு செய்திகள் வெளியாகின. ஆனால் பெரியசாமிதான் அதற்குத் தடையாக இருந்தார் என்றும் கூறப்பட்டது. தூத்துக்குடி மேயராக இருந்தவர் சசிகலா புஷ்பா என்பது நினைவிருக்கலாம்.
அண்ணாச்சி!
இதே வீரியத்தோடும் கருணாநிதியின் தீவிர ஆதரவோடும் கடந்த 40 வருடங்களாக தி.மு.க-வின் தூத்துக்குடி மாவட்ட செயலாளராக இருந்துவிட்டார் "அண்ணாச்சி". எதிர்க்க வேண்டிய இடத்தில் எதிர்ப்பது. பதுங்க வேண்டிய இடத்தில் பதுங்குவது. எதிரியையும் நண்பனாக்குவது போன்ற கருணாநிதியின் அரசியல் தந்திரத்தையே பெரியசாமியும் கொண்டிருந்தார். அந்த வகையில் பெரியசாமியை எதிர்த்தவர்கள் சிலர் அரசியலைவிட்டே காணாமல் போயிருக்கிறார்கள். அதேபோல் அவரை நம்பியவர்கள் சிலர் பயனடைந்திருக்கிறார்கள்.
என் தலைவனுக்கு மட்டும்தான் பயப்படுவேன்
என் தலைவனுக்கு மட்டும்தான் நான் பயப்படுவேன். வேறு எவனுக்கும் பயப்பட மாட்டேன் என்று பேசுவது பெரியசாமியின் வழக்கம். இன்று அந்த தலைவரும் கட்சியை விட்டும், அரசியலை விட்டும் ஒதுங்கியிருக்கிறார்.. பெரியசாமி உலகத்தை விட்டே போய் விட்டார்.
திகைப்பில் திமுக
சேலம் எப்படி வீரபாண்டியார் கோட்டையாக இருந்ததோ அதேபோல பெரியசாமியின் கோட்டையாக இருந்தது தூத்துக்குடி. இன்று அந்தக் கோட்டை கலகலத்துப் போயுள்ளது. இது திமுகவுக்கு நல்லதா கெட்டதா என்பதை வரும் காலம்தான் சொல்ல வேண்டும். ஆனால் பெரியசாமி ஏற்படுத்திய தாக்கம் அவ்வளவு சீக்கிரம் மறையாது என்று நம்பலாம்.