ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கூடாதாம்.. டெல்லியில் "மல்லுக்கட்டும்" பீட்டா
ஜல்லிக்கட்டுக்கு உள்ள தடையை நிக்கக் கூடாது என்று விலங்கு பாதுகாப்பு அமைப்பான பீட்டா கோரியுள்ளது.
சென்னை: இன்னும் 2 மாதத்தில் பொங்கல் வருவதையொட்டி ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு உள்ள தடையை நீக்கக் கூடாது என்று பீட்டா அமைப்பு கோரியுள்ளது.
இது தொடர்பாக பீட்டா அமைப்பின் இந்தியப் பிரிவு தலைமைச் செயல் அதிகாரி பூர்வா ஜோஷிபுரா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

காளைகளைத் துன்புறுத்தவும், கொலை செய்யவும் மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது. ஜல்லிக்கட்டு விஷயத்தில் மத்திய அரசு வேறுவிதமான நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது. விலங்குகளுக்கு எதிரான கொடூரத்தையும், சட்டவிரோத நடவடிக்கைகளையும் தடுப்பதில் இந்திய அரசு சிறப்பாக செயல்படும் என்று ஒட்டுமொத்த உலகமே எதிர்பார்க்கிறது.
விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டம் 1960ல் திருத்தம் கொண்டு வர மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஜல்லிக்கட்டின்போது காளைகள் வதைக்கப்படுகின்றன என்பதால்தான் உச்ச நீதிமன்றம் அதற்குத் தடை விதித்துள்ளது.
இதுபோன்ற மோசமான விளையாட்டுகளுக்கு காளைகள் இயற்கையாக உடன்படுவதும் இல்லை. அவற்றுக்குத் தேவையற்ற வலியைக் கொடுத்து ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது.
மேலும், கடந்த காலத்தில் ஜல்லிக்கட்டு அனுமதிக்கப்பட்ட காலத்தில் அதில் பங்கேற்ற ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்களில் சிலர் உயிரிழந்துவிட்டனர்.
குறிப்பாக 2010 முதல் 2014ஆம் ஆண்டு வரை ஜல்லிக்கட்டின்போது 1,100 பேர் காயமடைந்துள்ளனர். ஒரு குழந்தை உள்பட 17 பேர் உயிரிழந்தனர் என்று பூர்வா ஜோஷிபுரா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications