நாய் விவகாரம்.. பேசாமல் இருக்கும் பீட்டா.. வாயில் என்ன பீடா போட்டு மென்னுட்டிருக்காங்களோ??
சென்னை: 3வது மாடியிலிருந்து நாய் ஒன்றை தூக்கிப் போட்டு வீசி வெறித்தனமாக செயல்பட்ட இருவரை போலீஸார் கைது செய்துள்ள நிலையில், விலங்குகளுக்கு ஏதாவது ஒன்றால் நாங்கள் பொங்குவோம் என்று கூறிக் கொள்ளும் பீட்டா அமைப்பினர் இதுகுறித்து வாயே திறக்கவில்லை. கம்மென்று உள்ளனர்.
இதுவரை இந்த விவகாரம் குறித்து அவர்கள் பொங்கவில்லை, கோபப்படவில்லை, ஆட்சேபனை தெரிவிக்கவில்லை, ஆதங்கப்பவில்லை, கோர்ட்டுக்குப் போய் கேஸ் போடவில்லை.. அட எதையுமே... அவர்கள் செய்யவில்லை.
மாறாக ப்ளூகிராஸ் அமைப்பினர்தான் இந்த இருவரையும் அடையாளம் கண்டு போலீஸாருக்கு காட்டிக் கொடுத்து நடவடிக்கை எடுக்க உதவினர். தற்போது இந்த இருவரையும் அவர்களது பெற்றோரே கொண்டு வந்து ஒப்படைத்து விட்டனர். இருவரையும் கைது செய்த போலீஸார் கோர்ட்டில் நிறுத்தினர். இருவருக்கும் உடனடியாக ஜாமீனும் தரப்பட்டு விட்டது.

பீட்டா
இந்த நேரத்தில்தான் நமக்கு பீட்டா ஞாபகம் வந்து தொலைக்கிறது. இந்த பீட்டாக்காரர்கள் ஜல்லிக்கட்டுக்கு எதிராக கொடி பிடித்துக் கொண்டிருக்கும் கூட்டத்தினர். ஜல்லிக்கட்டை ஒழிக்க வேண்டும் என்பதை கங்கனம் கட்டிக் கொண்டு திரிகிறார்கள். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக யார் பேசினாலும் உடனே அவர்களை கடுமையாக கண்டிக்கிறார்கள்.

ஜல்லிக்கட்டு அழிவைப் பார்க்க துடிப்பு
தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்றான ஜல்லிக்கட்டின் அழிவைப் பார்க்க ஆசை கொண்டு துடித்துக் கொண்டிருக்கும் கூட்டம்தான் இந்த பீட்டா. ஆனால் விலங்குகளுக்கு நடக்கும் பல கொடுமைகளை இந்த கூட்டம் கண்டும் காணாமல் இருப்பதுதான் வேடிக்கையாக இருக்கிறது. தொடர்ந்து யானைகள் இறந்து வருகின்றன. பீட்டா கோஷ்டி அதைக் கண்டு கொள்வதே இல்லை.
கண்டு கொள்வதே இல்லை
இதோ இப்போது கூட ஒரு நாயைத் தூக்கி வீசி இரு மாணவர்கள் அட்டகாசம் செய்தனர். அதைக் கூட பீட்டா கண்டு கொள்ளவில்லை. ஒரு கண்டனம் கூட அது தெரிவிக்கவில்லை.

பிச்சை எடுப்பதைப் பார்க்க ஆசை
மிருகவதைக்கு எதிரான அமைப்பு என்று பீட்டாவுக்குப் பெயர். ஆனால் அதன் ஒரே நோக்கம் ஜல்லிக்கட்டை காலி செய்து தமிழகத்தில் நாட்டுக் காளைகளை அழித்து, நம் மக்கள் அந்நிய நாடுகளிடம் பாலுக்குக் கூட பிச்சை எடுக்க வேண்டும் என்பதாகவே உள்ளதாக தெரிகிறது.

நாய் இருந்தால் என்ன செத்தால் என்ன!
இதைத் தவிர்த்து வேறு எந்த விலங்கு இருந்தால் என்ன செத்தால் என்ன, எங்களுக்கு ஜல்லிக்கட்டு அழிய வேண்டும், காளைகள் ஒழிய வேண்டும். அது போதும் என்ற எண்ணத்துடன் பீட்டா இருப்பதாகவே தெரிகிறது.












Click it and Unblock the Notifications